புதுப்பிப்புப் பணிகளுக்காக மூடப்படும் ஆல்பர்ட் சென்டர் உணவங்காடி நிலையம்

புதுப்பிப்புப் பணிகளுக்காக மூடப்படும் ஆல்பர்ட் சென்டர் உணவங்காடி நிலையம்

1 mins read
d3308097-bc94-4bd5-8a9e-68e5477e9853
பிப்ரவரி 5 முதல் மே 4 வரை மூன்று மாதங்களுக்கு மூடப்படவுள்ள ஆல்பர்ட் சென்டர் ஈரச்சந்தை, உணவங்காடி நிலையம். - படம்: கூகல் மேப்ஸ்
Google News Preferred Icon

பூகிஸ் வட்டாரத்தில் அமைந்துள்ள ஆல்பர்ட் சென்டர் ஈரச்சந்தை, உணவங்காடி நிலையம் புதுப்பிப்புப் பணிகளுக்காக பிப்ரவரி 5 முதல் மே 4 வரை மூன்று மாதங்களுக்கு மூடப்படவிருக்கிறது.

புளோக் 270 குவீன் ஸ்திரீட் எனும் முகவரியில் அமைந்துள்ள அந்நிலையம், சிங்கப்பூரில் சமைத்த உணவுகளை விற்பதற்காக தொடக்க காலத்தில் தொடங்கப்பட்ட உணவங்காடி நிலையங்களில் ஒன்று.

அந்நிலையத்தில் 86 உணவுக்கடைகளும் 148 ஈரச்சந்தைக் கடைகளும் உள்ளன.

புதுப்பிப்புப் பணிகள் தொடர்பான அறிவிப்புப் பதாகைகள் அந்நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதாக ‘ஷின் மின்’ நாளிதழ் கூறியது.

அதுகுறித்த அந்நாளிதழிடம் கருத்துரைத்த உணவுக்கடைக்காரர்கள், வணிகம் அதிகமாக நடக்கும் சீனப் புத்தாண்டிற்குப் பிறகு அந்நிலையம் மூடப்படவிருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தனர்.

இவ்வாண்டு சீனப் புத்தாண்டு ஜனவரி 29, 30 தேதிகளில் கொண்டாடப்படவுள்ளது.

வாரத்திற்கு ஆறு நாள்கள் வேலைசெய்வதால் புதுப்பிப்புப் பணிகள் இடம்பெறும் காலகட்டத்தில் தாங்கள் சற்று ஓய்வெடுக்க உள்ளதாகச் சில கடைக்காரர்கள் கூறினர்.

காற்றோட்ட வசதி, தள ஓடுகள், மேசைகள், இருக்கைகளை மாற்றுதல் உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகள் அந்நிலையத்தில் இடம்பெறவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்