அலிபாபா நிறுவனத்தின் மேகக்கணிமைத் தளம் (கிளவுட்) பிரிவு புதன்கிழமை (ஜூலை 2) சிங்கப்பூரில் உலகளாவிய செயற்கை நுண்ணறிவுப் புத்தாக்க மையம் ஒன்றை திறந்தது.
இந்த மையம் உலகெங்கும் உள்ள 5,000 வர்த்தகங்கள் மற்றும் 100,000 மேம்பாட்டாளர்களுக்குத் தேவையான ஆதரவை வழங்கும்.
அலிபாபா கிளவுட்டின் மெய்நிகர் புத்தாக்க மையத்துக்கு ஏஐ குளோபல் காம்பிடன்சி சென்டர் என்று பெயரிடப்பட்டுள்ளது. மையத்துக்கான அறிமுக விழா ஷங்ரிலா ஹோட்டலில் நடைபெற்ற அலிபாபா கிளவுட்டின் உச்சநிலை மாநாட்டில் நடைபெற்றது.
முழுக்க முழுக்க இணையம் மூலம் வழங்கப்படும் வசதியைப் பயன்படுத்தி 1,000க்கும் மேற்பட்ட நிறுவனங்களும் புதிய நிறுவனங்களும் சந்தித்து அடுத்த தலைமுறைக்கான செயற்கை நுண்ணறிவுத் தீர்வுகளை இணைந்து உருவாக்கலாம் என்று அலிபாபா கிளவுட் தெரிவித்தது.
சீனாவைச் சேர்ந்த நிறுவனமான அலிபாபா கிளவுட், கடந்த பத்தாண்டுகளாக சிங்கப்பூரில் இயங்கி வருகிறது. தொடக்கத்திலிருந்து அதன் அனைத்துலகத் தலைமையகம் சிங்கப்பூரில் இருந்து வருகிறது.
மலேசியாவில் தரவு நிலையம் ஒன்றை அலிபாபா கிளவுட் திறந்துள்ளது.
வரும் அக்டோபர் மாதத்தில் பிலிப்பீன்சிலும் தரவு நிலையம் ஒன்றை அது திறக்க இருக்கிறது.