இம்மாதம் 19ஆம் தேதி தெம்பனிஸ் வட்டாரத்தில் இயக்கப்படும் மொத்தம் 29 பேருந்துச் சேவைகளும் கோ-அஹெட் சிங்கப்பூர் (Go-Ahead Singapore) நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளன.
அதனைத் தொடர்ந்து கடந்த 10 ஆண்டுகளாக தெம்பனிசில் எஸ்பிஎஸ் டிரான்சிட் இயக்கிய பேருந்துச் சேவைகளை இனி கோ-அஹெட் சிங்கப்பூர் நடத்தும்.
கட்டங்கட்டமாக ஒப்படைப்பு
ஒப்படைப்பு நடவடிக்கையின் முதற்கட்டமாக இம்மாதம் ஐந்தாம் தேதி 14 எஸ்பிஎஸ் டிரான்சிட் சேவைகள் கோ-அஹெட் சிங்கப்பூரிடம் மாற்றிவிடப்பட்டன. பேருந்துச் சேவை எண்கள் 10, 18, 20, 39, 299 ஆகியவை அவற்றில் அடங்கும்.
வரும் 19ஆம் தேதி எஞ்சிய 15 சேவைகளும் கோ-அஹெட் சிங்கப்பூரிடம் ஒப்படைக்கப்படும். பேருந்துச் வேவை எண்கள் 4, 37, 47, 127, 291 ஆகியவை அவற்றில் அடங்கும்.
சம்பந்தப்பட்ட 29 பேருந்துச் சேவைகளில் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டு சேவைகளும் அடங்கும். பேருந்துச் சேவை எண் 454 சென்ற ஆண்டு நவம்பர் மாதம் இயங்கத் தொடங்கியது. அதேவேளை, பேருந்துச் சேவை எண் 460 கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து இயங்கிவருகிறது.
ஒப்பந்தப்புள்ளிகள்
தெம்பனிஸ் வட்டாரத்துக்கான பேருந்துச் சேவைகளை இயக்குவதற்கான ஒப்பந்தப்புள்ளிகளை கோ-அஹெட் சிங்கப்பூர் சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் பெற்றது. பயணிகளுக்கு இடையூறின்றிப் பேருந்துச் சேவைகளை வழங்கும் நோக்கில் ஒப்படைப்பு நடவடிக்கைகள் கட்டங்கட்டமாக நடந்துவருவதாக கோ-அஹெட் தெரிவித்தது.
அனைத்து (29) பேருந்துச் சேவைகளும் சாங்கியில் அமைந்திருக்கும் புதிய ஈஸ்ட் கோஸ்ட் ஒருங்கிணைக்கப்பட்ட முனையத்திலிருந்து இயங்கும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் கேள்விகளுக்குப் பதிலளித்தது. முன்பு இடம்பெற்ற பேருந்துச் சேவை மாற்றம் போலவே இதுவும் கட்டங்கட்டமாக நடைபெறும் என்றும் ஆணையம் குறிப்பிட்டது.
சிங்கப்பூரின் ஆகப் பெரிய ஒருங்கிணைக்கப்பட்ட முனையம்
ஈஸ்ட் கோஸ்ட் ஒருங்கிணைக்கப்பட்ட முனையம், முழுமையாக இயங்கும்போது சிங்கப்பூரின் ஆகப் பெரிய ரயில், பேருந்துச் சேவை முனையமாக விளங்கும். இவ்வாண்டு இறுதிக்குள் அது முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த மார்ச் மாதம் முதல் தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட், கிழக்கு-மேற்கு ரயில் பாதைகள் ஈஸ்ட் கோஸ்ட் ஒருங்கிணைக்கப்பட்ட முனையத்திலிருந்து செயல்படத் தொடங்கின.

