சிங்கப்பூர் குதிரைப் பந்தய மன்றம் (சிங்கப்பூர் டர்ஃப் கிளப்) அமைந்துள்ள பகுதியை மேம்படுத்த அரசாங்கம் எடுத்த முடிவினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உதவி வழங்கப்படும். மன்றத்தில் உள்ள குதிரைப் பயிற்றுவிப்பாளர்களால் பணியில் அமர்த்தப்பட்டவர்களும் அவர்களில் அடங்குவர். தேசிய வளர்ச்சி, நிதி இரண்டாம் அமைச்சர் இந்திராணி ராஜா நாடாளுமன்றத்தில் அதனைத் தெரிவித்தார்.
குதிரைப் பயிற்றுவிப்பாளர்கள் கிட்டத்தட்ட 420 ஊழியர்களைப் பணியில் அமர்த்துகின்றனர் அல்லது ஈடுபடுத்துகின்றனர்.
இவர்கள் மன்றத்தின் ஊழியர்களாக இல்லாவிட்டாலும், அவர்களுக்கு ஆதரவு வழங்க அவர்களின் முதலாளிகளோடு (குதிரைப் பயிற்றுவிப்பாளர்கள்) மன்றம் இணைந்து செயல்படும் என்றார் குமாரி இந்திராணி.
வேலை தொடர்பான ஆதரவு, திறன் பயிற்சி, வாழ்க்கைத் தொழில் குறித்த ஆலோசனை ஆகியவையும் இந்த ஊழியர்களுக்கு வழங்கப்படும்.
வாடகைகளைப் பொறுத்தவரை, ஒப்பந்த ஏற்பாடுகள் நிறைவேற்றப்படும் என்றும், ஒரு சிலர் இடம் மாறவேண்டியிருந்தால் அதன் தொடர்பிலும் உதவி வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
கிராஞ்சியில் சிங்கப்பூர் குதிரைப் பந்தய மன்றம் அமைந்துள்ள வளாகத்தை 2027ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மூடப்போவதாக அரசாங்கம் கடந்த ஜூன் மாதம் அறிவித்தது. அந்த வளாகம் மறுமேம்பாட்டுக்காக அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படும்.
சிங்கப்பூரில் 2024ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் குதிரைப் பந்தயம் ஒரு முடிவுக்கு வரும்.