சூரிய மின் ஆற்றல் நிறுவல்களுக்கான விசாரிப்புகள் அதிகரிப்பு

சூரிய மின் ஆற்றல் நிறுவல்களுக்கான விசாரிப்புகள் அதிகரிப்பு

2 mins read
e9c3be25-ce7f-45d0-87b0-92229ba35562
இங்குள்ள சூரிய மின் தகடு நிறுவனங்கள், தரை வீடுகளில் சூரிய ஒளித் தகட்டைப் பொருத்தும் ஆர்வம் அவற்றின் உரிமையாளர்களிடமிருந்து அதிகரித்து வருவதாகத் தெரிவித்துள்ளன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தொடர்ந்து நிலவும் எரிசக்தி நெருக்கடி மற்றும் அதிகரித்து வரும் எரிபொருள் விலைகள் ஆகியவற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ளும் பொருட்டும், தங்கள் வீடுகளுக்கும் மின்சார வாகனங்களுக்கும் மின்சாரம் வழங்க சூரியனின் ஆற்றலைப் பயன்படுத்திக்கொள்ளும் பொருட்டும் தரை வீட்டு உரிமையாளர்கள் தங்கள் வீட்டுக் கூரைகளில் சூரிய மின் தகடுகளை நிறுவி வருகின்றனர்.

இங்குள்ள எட்டு சூரிய மின் தகடு நிறுவனங்களில் பெரும்பாலானவை, பிப்ரவரி 28ஆம் தேதி மத்திய கிழக்கு மோதல் தொடங்கியதிலிருந்து சூரிய மின் தகடுகள் பற்றி தங்களுக்கு அதிக விசாரிப்புகளும் தருவிப்பு ஆணைகளும் வந்துள்ளதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் தெரிவித்துள்ளன.

ஏப்ரல் 1 முதல் அதிகரித்து வரும் எரிசக்தி விலைகளால் மின்சாரக் கட்டணங்கள் உயர்ந்துள்ளன. மேலும் ஜூலை மாதத்தில் கூடுதல் உயர்வு எதிர்பார்க்கப்படுகிறது.

குறைந்த மின்சாரக் கட்டணங்கள், சூரிய மின் தகடு நிறுவல்களின் விலை வீழ்ச்சி, நிலையற்ற எரிசக்தி விலைகள், மின்சார வாகனங்களின் உரிமை மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றை குடியிருப்பாளர்கள் சூரிய ஆற்றலை நாடுவதற்கான காரணிகளாகக் குறிப்பிடுகின்றனர். மேலும் சிலர், உபரி ஆற்றலை மின் கட்டமைப்புக்கு வழங்குவதன் மூலம் வருவாயும் ஈட்டுகின்றனர்.

சூரிய ஆற்றல் நிறுவனமான ‘சுனோலோ’வின் தலைமை நிர்வாகி நட்டாலி ரிஸ்டோ, ஜனவரி, பிப்ரவரி மாதங்களுடன் ஒப்பிடுகையில், மார்ச் 1ஆம் தேதி முதல் தமது நிறுவனம் குடியிருப்பு விசாரணைகளில் சுமார் 110 விழுக்காட்டு அதிகரிப்பைப் பெற்றுள்ளதாகக் கூறினார்.

‘ஃபோமோ எனர்ஜி’ நிறுவனத்துடனான விசாரிப்புகளும், முந்தைய மாதங்களுடன் ஒப்பிடுகையில், மார்ச் மாதத் தொடக்கத்திலிருந்து 60 முதல் 70 விழுக்காடு வரை அதிகரித்துள்ளதாக அந்த சூரிய ஆற்றல் நிறுவனத்தின் வணிக மேம்பாட்டு மேலாளர் டியோன் சிம் கூறினார்.

“உலகளாவிய எரிபொருள் விலைகள் மேலும் கணிக்க முடியாததாகி வருவதால், வீட்டு உரிமையாளர்கள் தங்கள் எரிசக்தி செலவுகளை மீண்டும் கட்டுப்படுத்த வழிகளைத் தேடுகின்றனர். மேலும், சூரிய ஆற்றல் ஒரு நடைமுறைப் பாதுகாப்பாகப் பார்க்கப்படுகிறது,” என்று திருவாட்டி சிம் கூறினார்.

“அதிகரித்து வரும் மின்சாரக் கட்டணங்களுக்கு எதிராக வீட்டு உரிமையாளர்களுக்குப் பாதுகாப்பை அளிப்பதுடன், வீடுகளில் உள்ள சூரிய மின் தகடு அவர்களின் ஆற்றல் செலவுகள் மீது அதிக முன்கணிப்பையும் கட்டுப்பாட்டையும் அளித்து, மின் கட்டமைப்பைச் சார்ந்திருப்பதைக் குறைக்கின்றன,” என்று ‘கெட்சோலார்’ நிறுவனத்தின் இணை நிறுவனர் போலோங் சூ விவரித்தார்.

எரிசக்தி சந்தை ஆணையத்தின் சூரிய மற்றும் மின்கட்டமைப்புத் தீர்வுகள் பிரிவின் இயக்குநர் வயலட் சென், கடந்த பல ஆண்டுகளாக சிங்கப்பூரில் தனியார் வீடுகளில் சூரிய ஆற்றல் நிறுவலில் கணிசமான வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாகக் கூறினார்.

அண்மைய புள்ளிவிவரங்களின்படி, சூரிய ஆற்றல் பொருத்தப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 2021ல் 1,749ஆக இருந்து 2025ல் 6,912ஆக அதிகரித்துள்ளது என்று அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்