சன்டெக் சிட்டி மாநாட்டு மண்டபத்தில் சனிக்கிழமை (மே 9) நடைபெற்ற அனிமே எனும் உயிரோவியக் கண்காட்சியில் சமூக ஊடகச் சர்ச்சைகள் தொடர்பில் பிரபலமான ஏமஸ் யீ என்பவரைத் தாக்கிய குற்றத்துக்கு 18 வயது இளையர்மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.
பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தது, ஒருவரைத் தாக்கியது ஆகிய இரு குற்றங்களைப் பொஸ்கொ சுன் ஹொ வாங் என்ற அந்த 18 வயது இளையர் எதிர்நோக்குகிறார்.
மத்திய காவல்துறைப் பிரிவில் இருந்து அவர் காணொளி வழியாக நீதிமன்ற விசாரணையில் திங்கட்கிழமை (மே 11) கலந்துகொண்டார்.
சம்பவம் நடந்த நாளன்று பிற்பகல் இரண்டு மணியளவில் உரத்தக் குரலில் கத்தியபடி அவர் ஏமஸ் யீயைக் குத்தியதோடு, உதைத்தும் தாக்கினார் என்று நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டது.
எதனால் ஏமஸ்சை சுன் தாக்கினார் என்பதற்கான காரணம் தெரியவில்லை.
சுன்னுக்கு $5,000 பிணை வழங்கப்பட்டு, அவரது விசாரணை ஜூன் 2ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்.
ஏமஸ் யீ, சிலகாலம் அமெரிக்காவில் வாழ்ந்தபோது அவர்மீது குழந்தைகளிடம் பாலியல் குற்றம் புரிந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டதோடு, அதற்கான தண்டனையை அங்கு நிறைவேற்றிய பிறகு அண்மையில் சிங்கப்பூர் திரும்பினார்.

