எட்டு ரயில் நிலையங்களை உள்ளடக்கிய வடக்கு-தெற்குப் பாதையில் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 26) காலை ரயில் சேவை சிறிது நேரத் தாமதத்திற்குப் பிறகு வழக்க நிலைக்குத் திரும்பியது. ரயில் ஒன்றில் கோளாறு ஏற்பட்டதால் சேவை பாதிக்கப்பட்டதாக எஸ்எம்ஆர்டி நிறுவனம் தெரிவித்தது.
அங் மோ கியோ, உட்லண்ட்ஸ் நிலையங்களுக்கு இடையே ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டதாகக் காலை 7.38 மணி அளவில் ஃபேஸ்புக்கில் எஸ்எம்ஆர்டி பதிவிட்டது.
சிறிது நேரமே தாமதம் ஏற்பட்டதாகப் பின்னர் வெளியிடப்பட்ட தகவலில் அந்நிறுவனம் கூறியது.
பயணிகள் தொடர்ந்து ரயில் சேவைகளைப் பயன்படுத்தலாம், பாதிக்கப்பட்ட ரயில் நிலையங்களில் மட்டும் இலவசப் பேருந்துகளைப் பரிசீலிக்கலாம் என்றும் அது தெரிவித்தது.
ரயிலில் கோளாறு ஏற்பட்டதால் பயணிகளுக்குக் கூடுதல் பயண நேரம் தேவைப்படலாம் என்று காலை 7.42 மணியளவில் எஸ்எம்ஆர்டி மற்றொரு பதிவில் தெரிவித்தது.
காலை 8.13 மணியளவில், பாதிக்கப்பட்ட ரயில் நிலையங்களில் சேவைகள் வழக்கநிலைக்குத் திரும்பின.

