இல்லங்களுக்குப் பிராணிகளை வரவேற்க விரும்புவோருக்கென சிங்கப்பூரின் மத்திய வர்த்தக வட்டாரத்தில் (சிபிடி) ஆகஸ்ட் 27 முதல் ஆகஸ்ட் 29ஆம் தேதி வரை செல்லப் பிராணிகளை தத்தெடுத்துக்கொள்ளும் பொது நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
அதனை விலங்கு, கால்நடை மருத்துவச் சேவை அமைப்பு (ஏவிஎஸ்) ஏற்பாடு செய்துள்ளது.
‘போஸ் இன் த சிட்டி’ (‘நகரில் விலங்கு நகங்கள்’) என்ற பெயரில் மூன்று நாள்கள் சிபிடி பகுதியில் முதன்முறையாக நடக்கும் அந்நிகழ்ச்சி, தஞ்சோங் பகாரில் உள்ள குவோக்கோ டவுர் பூங்காவில் முற்பகல் 11 மணி முதல் இரவு 8 மணிவரை நடைபெறும்.
அதன்வழியாக ஏவிஎஸ் அமைப்பு பிராணிகளைத் தத்தெடுக்கும் திட்டத்தை நகரின் மத்திய பகுதிக்கு வரவழைக்கிறது. அந்நிகழ்வில் பத்து வெவ்வேறு விலங்கியல் குழுக்கள் பலவகைப் பிராணிகளை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவற்றில் நாய்கள், பூனைகள், சிறிய வகை விலங்குகள், பறவைகள் என வருகையாளர்களுக்கு ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுக்கப் பல வாய்ப்புகள் வழங்கப்படும்.
“தத்தெடுக்கும் வாய்ப்பை நகரின் மத்தியப் பகுதிக்கு கொண்டு வருவதால் மேலும் பலரை ஈர்க்க நாங்கள் முயல்கிறோம். ஒரு வாழ்விடத்தைத் தேடும் பல விலங்குகளுக்கு ஒரு நிரந்தர இருப்பிடத்தை வழங்க பொதுமக்களுக்கு இது ஊக்கமாக அமையும் என எதிர்பார்க்கிறோம்,” என்று ஏவிஎஸ் அமைப்பின் சமூக விலங்கியல் நிர்வாக இயக்குநர் அனா வோங் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
பிராணிகளை நல்ல முறையில் பராமரித்தல், நாய்களுக்குப் பயிற்சி அளித்தல், விலங்குகளைத் தத்தெடுத்தல், அவற்றின் உரிமையாளர் ஆதல் போன்ற பல விவரங்களை பொதுமக்கள் அறிய நிகழ்ச்சியில் பல கூடாரங்கள் அமைக்கப்பட்டிருக்கும். அங்கு பணியில் உள்ள ஏஏவிஎஸ் அதிகாரிகளை மக்கள் சந்தித்து பலவற்றை கேட்டறியலாம்.
சிங்கப்பூரில் உள்ள நாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தி நிர்வகிக்க அவற்றுக்கென நல்வழியில் புதிய இருப்பிடங்களை அமைப்பது குறித்து ஆகஸ்ட் 29ஆம் தேதி கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கு ‘இடமின்றி அலையும் அனைத்து நாயும் முக்கியம்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது.


