சிங்கப்பூரில் விலங்குகள் கைவிடப்படுவது மற்றும் துன்புறுத்தப்படும் சம்பவங்களின் எண்ணிக்கை 12 ஆண்டு உச்சத்தைத் தொட்டுள்ளது.
எனவே, விலங்குகளைப் பாதுகாக்க வலுவான சட்டங்களும் அமலாக்கமும் தேவைப்படுவதாக விலங்குக் கொடுமைத் தடுப்புச் சங்கம் (SPCA) தெரிவித்து உள்ளது.
2024ஆம் ஆண்டு முழுவதும் விலங்கு துன்புறுத்தல் தொடர்பாக 961 புகார்கள் பதிவானதாக சங்கம் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 7) வெளியிட்ட ஆண்டறிக்கை தெரிவித்தது.
சிங்கப்பூரில் ஆண்டுதோறும் நிகழும் விலங்கு துன்புறுத்தல் மற்றும் விலங்கு நல்வாழ்வுச் சம்பவங்களை அந்த ஆண்டறிக்கை தொகுத்து வழங்கும்.
விலங்கு துன்புறுத்தல் அல்லது விலங்கு நல்வாழ்வு மீதான கவலைகள் தொடர்பாக 2024ஆம் ஆண்டு மொத்தம் 1,109 புகார்களைச் சங்கம் பெற்றபோதிலும் அவற்றில் 148 புகார்களுக்குப் போதுமான ஆதாரம் இல்லை.
புகார் தொடர்பான சம்பவங்களில் 2,190 விலங்குகள் பாதிக்கப்பட்டன. அதன்படி பார்த்தால், சிங்கப்பூரில் சராசரியாக நாள் ஒன்றுக்கு ஆறு விலங்குகள் பாதிக்கப்படுகின்றன அல்லது உயிரிழக்கின்றன.
அவற்றில் பாதிக்கும் மேற்பட்டவை பூனைகள். அதாவது, 1,330 புகார்கள் பூனைகள் தொடர்பானவை. மொத்தம் பதிவான புகார்களில் அது 60.7 விழுக்காடு.
நாய்கள் தொடர்பாக 376 புகார்கள், அதாவது 17.2 விழுக்காடு புகார்கள் பதிவாயின. பறவைகள் தொடர்பான புகார்கள் மூன்றாம் இடத்தைப் பிடித்தன. 172 பறவைகள் தொடர்பாக புகார்கள் செய்யப்பட்டன. மொத்த புகார்களில் அது 7.9 விழுக்காடு.