அனிமல் லவர்ஸ் லீக் அமைப்பில் உள்ள அனைத்து பூனைகளும் வாய்சஸ் ஃபார் அனிமல்ஸ் அமைப்பிற்கு இம்மாதம் 27ஆம் தேதி மாற்றப்படும் என்று செவ்வாய்க்கிழமை (மார்ச் 24) தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரின் முன்னோடி விலங்குநலக் குழுக்களில் ஒன்றான அனிமல் லவர்ஸ் லீக், சுங்கை தெங்காவில் உள்ள த அனிமல் லாட்ஜ் வளாகத்தில் செயல்படுவதற்கான குத்தகையைக் கடந்த ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி இழந்தது.
அனிமல் லவர்ஸ் லீக், கிட்டத்தட்ட 50 மாதங்களுக்கு வாடகை கொடுக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து வளாகத்தில் அமைப்பு பயன்படுத்திய எட்டு அறைகளை விலங்குநல, கால்நடை மருத்துவச் சேவையிடம் திரும்ப ஒப்படைக்கும்படி கூறப்பட்டது.
அனிமல் லவர்ஸ் லீக் அமைப்பில் உள்ள பூனைகள் அனைத்தும் வாய்சஸ் ஃபோர் எனிமல்ஸ் அமைப்பிற்கு மாற்றப்படுவதால் பூனைகளுக்கான முக்கியப் பொருள்களைப் பெற அமைப்பின் நிறுவனர் டெரிக் டான் ஃபேஸ்புக்கில் பதிவிட்டார். அதிகமான பூனைகளைப் பராமரிக்கவேண்டிய நிலையில் உள்ளதால் உதவிகோரி ஃபேஸ்புக்கில் பதிவிட்டதாக அவர் குறிப்பிட்டார். இப்போதைக்கு வாய்சஸ் ஃபோர் அனிமல்ஸ் அமைப்பு 92 பூனைகளைத் தனது பராமரிப்புக்குள் எடுத்துக்கொள்ளும் என்ற திரு டான், அந்த எண்ணிக்கை இனிவரும் நாள்களில் மாறலாம் என்றார்.
ஒருசில பூனைகளை அவற்றின் உரிமையாளர்களும் பராமரிப்பாளர்களும் எடுத்துச்சென்றுவிட்டதாக திரு டான் கூறினார். எஞ்சிய பூனைகளைத் தத்தெடுப்பதற்கான நிகழ்ச்சி ஒன்றைச் சிங்கப்பூர் பெட் எக்ஸ்போவில் நடத்த வாய்சஸ் ஃபோர் அனிமல்ஸ் அமைப்பு திட்டமிட்டுள்ளது.
ஏப்ரல் 3ஆம் தேதி முதல் 5ஆம் தேதிவரை சிங்கப்பூர் எக்ஸ்போ மண்டபம் 5பி, 6 ஆகியவற்றில் தத்தெடுப்பு நிகழ்ச்சி நடைபெறும்.

