ஆகஸ்ட் மாதத் தொடக்கத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும் எனவும் பல நாள்களில் அவ்வப்போது அதிகக் காற்று வீசும் என்றும் சிங்கப்பூர் வானிலை ஆய்வு மையம் அதன் இருவாரத்துக்கான கணிப்புகளில் வெள்ளிக்கிழமை (ஜூலை 31) தெரிவித்தது.
சில நாள்களில் தீவின் சில வட்டாரங்களில் குறுகிய நேரத்துக்கு இடியுடன் கூடிய மழை முற்பகலிலும் மதிய வேளைகளிலும் பெய்யும் எனவும் அது கூறியது.
ஆகஸ்ட் மாதத்துக்கான முதல் இரு வாரங்களின் மொத்த மழையின் அளவு வழக்கத்தைவிட குறைவாகவே பல இடங்களில் பெய்யும் எனவும் மையம் குறிப்பிட்டுள்ளது.
அன்றாட வெப்பநிலை 33 டிகிரி செல்சியசுக்கும் 34 டிகிரி செல்சியசுக்கும் இடைப்பட்டிருக்கும் என்று அது தெரிவித்தது. இரவு நேரங்கள் வெப்பமாகவும் ஈரப்பதமாகவும் பல நாள்களுக்கு 27 டிகிரி செல்சியஸ் அளவுக்குமேல் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஜூலை மாதத்தின் கடைசி இருவாரங்கள் குறித்து கருத்துரைத்த வானிலை மையம், தென்மேற்குப் பருவ மழை தீவில் மாற்றத்தை ஏற்படுத்தியது எனவும் கிழக்கு, தென்கிழக்குத் திசைகளில் இருந்து அதிகமாக காற்று வீசியதாகவும் அது விளக்கியது.

