எதிர்க்கட்சி அரசியல்வாதி லிம் தியெனுக்கு எதிராகக் கைதாணை

எதிர்க்கட்சி அரசியல்வாதி லிம் தியெனுக்கு எதிராகக் கைதாணை

1 mins read
ba0a12fb-1fdd-49fb-b06a-693569226dd7
வழக்கறிஞரும் மக்கள் சீர்திருத்தக் கூட்டணியின் தலைமைச் செயலாளருமான லிம் தியென். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

செல்லுபடியாகும் சான்றிதழ் இல்லாமல் வழக்கறிஞராகப் பணியாற்றிய குற்றத்துக்காக விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையைத் தொடங்குவதற்காகத் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 3) அரசு நீதிமன்றத்தில் சரணடையத் தவறியதை அடுத்து, மக்கள் சீர்திருத்தக் கூட்டணியின் தலைமைச் செயலாளரும் வழக்கறிஞருமான லிம் தியெனுக்கு எதிராகக் கைதாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2021ஆம் ஆண்டில் தகுந்த சான்றிதழின்றி 32 முறை நீதிமன்ற வழக்குகளில் வழக்கறிஞராகச் செயல்பட்டதற்காகவும் ஆவணங்களைச் சமர்ப்பித்ததற்காகவும் அவருக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

லிம் தியென் தமது தனிப்பட்ட விவகாரங்களை முடிப்பதற்காக ஜூலை 20ஆம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 3ஆம் தேதி நண்பகல் 12 மணி வரை தண்டனையைத் தள்ளிவைக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.

இருப்பினும், அவர் குறிப்பிடப்பட்ட நேரத்தில் அரசு நீதிமன்றத்தில் சரணடையவில்லை.

லிம் தியென் சரணடையாததற்கான காரணம் தெரியவில்லை என்றும் ஆகஸ்ட் 3ஆம் தேதி காலையிலும் தமக்கு அவர் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும் அவருடைய வழக்கறிஞர் திரு ரவி சங்கர் தெரிவித்தார்.

பின்னர் லிம் தியெனுடன் தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் அவர் கூறினார். இச்சம்பவம் தொடர்பாக, பிணைத்தொகையை ஏன் பறிமுதல் செய்யக்கூடாது என்பது குறித்து விளக்கமளிக்க அவரது பிணைத் தொகையைச் செலுத்தியவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதுடன், கைதாணையின் நிலை குறித்து ஆகஸ்ட் 17ஆம் தேதி நீதிமன்ற மறுஆய்வு நடைபெறும் என நீதிமன்றச் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்