கனமழையால் வெள்ளை நிற சடங்குபூர்வ சீருடைகள் நனைந்து ஒளிரும் நிலைக்கு மாறியபோதிலும், சனிக்கிழமையன்று (ஜூலை 18) மாலை 6.45 மணிக்கு அதிபருக்கான பீரங்கி முழக்க மரியாதைக் குழுவின் வீரர்கள், தங்கள் நான்கு ‘25-பவுண்டர் ஹோவிட்சர்’ பீரங்கிகள் கர்ஜித்தபோது, அவற்றின் அருகே அசையாமல் நின்றிருந்தனர். பொறுப்பதிகாரியின் துல்லியமான கட்டளைகள் ஒலித்தபோது, ஒத்திகைக்கான பீரங்கி முழக்க மரியாதையின் 19 குண்டுகளும் மிகச் சரியான வரிசையில் அடுத்தடுத்து முழங்கின. பீரங்கி முழக்க மரியாதை தொடங்குவதற்கு சுமார் 15 நிமிடங்களுக்கு முன்பு, லேசான தூறல் தொடங்கியதால், இந்த தேசிய தின அணிவகுப்பில் முதன்முறையாக அதிபருக்கான பீரங்கி முழக்க மரியாதை எனும் புகழ்பெற்ற பாரம்பரியம் நடைபெறவுள்ள காலாங் பேசினின் இரு கரைகளிலும் குடைகள் ஆங்காங்கே காணப்பட்டன.
தேசிய தின அணிவகுப்பு நடைபெறும் தேசிய விளையாட்டரங்கிலிருந்து ஏறக்குறைய 200 மீட்டர் தொலைவில் பீரங்கி முழக்க மரியாதை செலுத்தப்படும். சிங்கப்பூர் பீரங்கிப்படையின் 23வது பட்டாளம் மற்றும் சிங்கப்பூர் போர் பொறியாளர்களின் 35வது பட்டாளம் ஆகியவற்றிலிருந்து 151 வீரர்கள் இந்த அங்கத்தில் பங்களிக்கின்றனர். ஜூலை 18ஆம் தேதியன்று ஒத்திகை தொடங்குவதற்கு முன்பு ஊடகங்களிடம் பேசிய மேஜர் சின் வெய் ஜியான், தேசிய விளையாட்டரங்கில் நடைபெறும் அணிவகுப்பில் கலந்துகொள்ள முடியாத பொதுமக்கள், அதன் தாக்கத்தை உணர்ந்து, பீரங்கி முழக்கத்தை நேரடியாகக் காணும் வகையில், 2026ஆம் ஆண்டின் அதிபருக்கான பீரங்கி முழக்கத்துக்கான இடமாக காலாங் பேசின் தேர்ந்தெடுக்கப்பட்டதாகக் கூறினார்.
காலாங் பேசினின் பாதுகாப்பான பயன்பாட்டை உறுதி செய்வதற்காக, பீரங்கி முழக்க மரியாதை செலுத்தும் குழு, தேசிய நீர் அமைப்பான பியுபியுடன் நெருக்கமாகப் பணியாற்றியதாக மேஜர் சின் கூறினார். "படகுப் பந்தயக் குழுக்களும் கடல்நாகப் படகோட்டிகளும் கடுமையாகப் பயிற்சி செய்து வருகின்றனர். நாங்கள் அவர்களைப் பயிற்சி செய்ய அனுமதிக்கும் அதேவேளையில், நாங்கள் செயல்படும்போது, அங்கு ஒரு நீர் பாதுகாப்பு வளையம் இருப்பதை உறுதிசெய்தோம்," என்று திரு சின் கூறினார். அதிபருக்கான பீரங்கி முழக்க மரியாதைப் பணிக்குழு, பொதுமக்கள் உரத்த பீரங்கி முழக்கம் குறித்து அறிந்திருக்கும் வகையில், கடற்கரையோரம் எச்சரிக்கைப் பலகைகளை அமைக்கும். மேலும், தேவைப்படும் பார்வையாளர்களுக்குக் காது அடைப்பான்களையும் அது வழங்கும்.

