வட்டார இணையத்தள அச்சுறுத்தலுக்கு எதிரான, ஆசியான் வட்டார கணினி அவசரகால நடவடிக்கைக் குழு சிங்கப்பூரில் புதன்கிழமை (அக்டோபர் 16) தொடங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், உலகளாவிய இணையத் தாக்குதலின்போது அத்தியாவசிய சேவைகளை தொடர்ந்து செயல்படுத்த ஆசியான் நாடுகளிடையே வேவுத் தகவல் பரிமாற்றத்தை எதிர்பார்க்கலாம்.
ஆசியான் வட்டார கணினி அவசரகால நடவடிக்கைக் குழு, ஆசியான் நாடுகளில் இணையப் பாதுகாப்பை மேம்படுத்தும் என்று தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோஸஃபின் டியோ தெரிவித்தார்.
நகர மண்டபத்தில் இயங்கும் ஆசியான் – சிங்கப்பூர் இணையப்பாதுகாப்பிற்கான உன்னத நிலையத்தில் இக்குழு அமைந்திருக்கும். மலேசியா அதன் முதல் ஒட்டுமொத்த ஒருங்கிணைப்பாளராக தலைமை தாங்கும். 10 உறுப்பு நாடுகளும் ஈராண்டுகளுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் தலைமையேற்று குழுவை வழிநடத்தும்.
வட்டாரக் குழுவின் செயல்பாடுகளுக்கு ஆதரவளிக்க சிங்கப்பூர் அடுத்த பத்தாண்டுகளில் $10 மில்லியனை ஒதுக்கியுள்ளது. தொழில்துறைக்கும் கல்வியாளர்களுக்கும் இடையிலான ஒத்துழைப்புகளுக்கும் ஆதரவளிக்கும் இந்தக் குழு, இணையப் பயிற்சிகளையும் நடத்தும்.
தாக்குதல் நடத்துபவர்கள் குறிவைப்பதற்கான மின்னிலக்க சேவைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை மேற்கோள் காட்டிய திருவாட்டி டியோ, “இந்த தொழில்நுட்பங்கள் மிகவும் வசதியானவையாகவும் பயன்படுத்த எளிதானவையாக இருந்தபோதும், அவை அந்தந்த நாடுகளின் தாக்குதல் பரப்பளவை பெரிதும் விரிவுபடுத்தியுள்ளன” என்றார்.
ஆசியானில் மின்னிலக்கப் பொருளியல் 2030ஆம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் அமெரிக்க டாலரை ($1.31 டிரில்லியன் சிங்கப்பூர் வெள்ளி) எட்டவுள்ளது. இவ்வட்டாரத்தில் 700 மில்லியன் மக்கள் உள்ளனர். அவர்களில் பலர் இணைய அறிவுள்ளவர்கள். விரைந்து நவீன தொழில்நுட்பத்துக்கு மாறுகின்றனர்.
“எனினும், நாம் ஒன்றிணைந்திருந்தால், இணையப் பாதுகாப்பை வலுப்படுத்துவதுடன், மின்னிலக்க எதிர்காலத்தையும் பாதுகாக்க முடியும்,” என்றார் அறிவார்ந்த தேசம், இணையப் பாதுகாப்பு ஆகியவற்றுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான திருவாட்டி டியோ.
தொடர்புடைய செய்திகள்
சேண்ட்ஸ் எக்ஸ்போ , மாநாட்டு மையத்தில் நடைபெற்ற இணையப் பாதுகாப்பு குறித்த ஒன்பதாவது ஆசியான் அமைச்சர்கள் மாநாட்டில் அவர் பேசினார். இது இவ்வட்டாரத்தில் தொழில்நுட்பத்தை மேற்பார்வையிடும் அதிகாரிகளின் கூட்டமாகும்.