சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், கெத்தே பசிபிக் போன்ற ஆசிய விமான நிறுவனங்கள், மத்திய கிழக்கில் போரால் ஏற்பட்டுள்ள நிலைமையைச் சமாளிப்பதற்கு ஆகச் சிறந்த நிலையில் உள்ளன.
அந்தப் போரிலிருந்து தப்பிக்க, பயணிகள் விரைந்து விமானச் சேவைகளை நாடுகின்றனர்; பெரிய அளவில் கட்டணம் செலுத்துகின்றனர்.
ஈரான்மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல் நடத்திவரும் வேளையில், மத்திய கிழக்கிலிருந்து தப்பிக்க நினைப்போர் ஆசிய விமான நிறுவனங்களை அதிகம் நாடுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
பெரிய அளவில் வான்வெளிகள் மூடப்பட்டிருப்பதால், எமிரெட்ஸ், கத்தார் ஏர்வேஸ் போன்ற விமான நிறுவனங்கள் தற்போதைக்குச் செயல்பாடுகளை நிறுத்தியுள்ளன.
அதன் காரணமாக, ஐரோப்பாவுக்கும் ஆசியாவுக்கும் இடையே இடைவிடாச் சேவைகளை வழங்கும் மற்ற விமான நிறுவனங்களுக்கு வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
மத்திய கிழக்கைத் தவிர்த்து ஆசியாவுக்குச் செல்லும் விமானச் சேவைகளுக்கு ஐரோப்பிய நடுவங்களில் உள்ள பயணிகள் அதிக அளவில் பணம் செலுத்துகின்றனர்.
மார்ச் 5ஆம் தேதி, ஹீத்ரோவிலிருந்து சிங்கப்பூருக்கான எஸ்ஐஏ ‘இக்கானமி’ ஒருவழிப் பயணத்துக்கான விமான நுழைவுச் சீட்டுக் கட்டணம் $10,916 என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த மாதப் பிற்பகுதிக்கான கட்டணங்களைக் காட்டிலும் அது 900% அதிகம். இருப்பினும், அத்தகைய விமான நுழைவுச் சீட்டுக் கட்டணங்கள் எவ்வளவு காலத்திற்கு அதே நிலையில் இருக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

