ஜப்பானில் நடைபெற இருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க 256 திடல்தட வீரர்களைக் கொண்ட குழுவை சிங்கப்பூர் அனுப்புகிறது.
அவர்கள் 23 விளையாட்டுகளில் பங்கேற்பார்கள் என்று சிங்கப்பூர் தேசிய ஒலிம்பிக் மன்றம் செவ்வாய்க்கிழமை (ஜூன் 2) தெரிவித்தது.
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 4 வரை ஜப்பானின் ஐச்சி மாகாணத்திலும் அதன் தலைநகர் நகோயாவிலும் நடைபெற உள்ளன.
சிங்கப்பூர் அனுப்ப இருக்கும் முதல் குழுவில் இடம்பெற்றுள்ள 256 பேரில் 115 பேர், ஆசிய விளையாட்டுப் போட்டி ஏற்பாட்டாளர்களால் நிர்ணயிக்கப்பட்ட தகுதித் தரநிலைகளை எட்டிவிட்டனர். எஞ்சிய 141 பேர் அதனை எட்டவில்லை என்றபோதிலும் 256 வீரர்களும் தனது தேர்வுக்குழுவின் அளவுகோல்களைப் பூர்த்திசெய்துள்ளனர் என்றும் அதில் தான் திருப்தியடைவதாகவும் ஒலிம்பிக் மன்றம் தெரிவித்துள்ளது.
சில திடல்தட வீரர்களும் அணிகளும் இன்னும் பரிசீலனையில் வைக்கப்பட்டுள்ளன. அதேவேளை, காலக்கெடுவைத் தவறவிட்ட போட்டிகளின் முடிவுகளுக்காக சில தேசிய விளையாட்டுச் சங்கங்கள் காத்திருக்கின்றன.
தற்போது முதற்கட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படாத விளையாட்டு வீரர்களுக்காக தேசிய விளையாட்டுச் சங்கங்கள் ஜூன் மாதப் பிற்பகுதியில் மேல்முறையீடுகளைச் சமர்ப்பிக்கலாம். நிர்ணயிக்கப்பட்ட மேல்முறையீட்டு நடைமுறையின் வாயிலாக அவை அவ்வாறு செய்யலாம் என்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இறுதி அணிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

