அரசியலுக்குப் பொருத்தமானவர்களைத் தேர்வுசெய்வதில் உள்ள சவால் சிங்கப்பூருக்கு மட்டுமானதன்று என்று பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.
அரசியல் பதவி வகிப்போர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் சம்பளக் கட்டமைப்பு தொடர்பில் தன்னிச்சையான குழு முன்மொழிந்த பரிந்துரைகளை அரசாங்கம் ஏற்றுக்கொண்டது.
அதன் தொடர்பில் நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 8) பேசிய பிரதமர் லாரன்ஸ் வோங் பேசினார்.
சிங்கப்பூர் அமைச்சர்களின் திறமையைக் கண்டு தாம் மிகவும் வியந்ததாக வெளிநாட்டுப் பிரதமர் ஒருவர் தம்மிடம் கூறியதைப் பகிர்ந்துகொண்ட பிரதமர் வோங், தமது அமைச்சரவைக்குத் தகுதியானவர்களைக் கண்டறிவதே தமக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பதாக அந்தத் தலைவர் குறிப்பிட்டதையும் சுட்டினார்.
தனியார் துறையிலிருந்து வந்த அந்த வெளிநாட்டுப் பிரதமர், அரசியலுக்கு வெளியே உள்ள திறனாளர்களின் தரத்தையும் சரியானவர்களை அரசியலுக்கு ஈர்ப்பது எவ்வளவு கடினம் என்பதையும் நன்கு அறிந்திருந்ததாகத் திரு வோங் கூறினார்.
ஒவ்வோர் அரசியல் அமைப்பும் எதிர்கொள்ள வேண்டிய அடிப்படைச் சவாலை இது உணர்த்துகிறது என்று பிரதமர் குறிப்பிட்டார்.
‘“அரசியல் என்பது சேவை மனப்பான்மையுடன் கூடிய தொண்டாக இருக்க வேண்டும் என்றாலும், தனிப்பட்ட முறையிலும் நிதி சார்ந்தும் மிகுந்த தியாகம் செய்ய வேண்டியுள்ளதால் திறனாளர்கள் பலர் வேறு துறைகளைத் தேர்ந்தெடுக்கவே முற்படுவர்,” என்று அவர் விளக்கினார்.
வெவ்வேறு நாடுகள் இந்தச் சவாலை வெவ்வேறு வழிகளில் கையாள முயல்வதாக அவர் சொன்னார்.
“பல அமைப்புகளில் பணிசார்ந்த சம்பளம் குறைவாக இருந்தாலும், பதவி சார்ந்த பிற கணிசமான சலுகைகளும் உரிமைகளும் வழங்கப்படுகின்றன. சில இடங்களில், அரசியல்வாதிகள் வேறு தொழில்கள் மூலமாகத் தங்களது வருமானத்தைப் பெருக்கிக்கொள்கின்றனர்; அல்லது பதவியிலிருந்து விலகிய பிறகு பெரிய அளவிலான நிதிப் பலன்களைப் பெறுகின்றனர். எனவே, வெளிப்படையாகத் தெரியும் சம்பளம் குறைவாகத் தோன்றினாலும், ஒட்டுமொத்த நிலைமை மிகவும் சிக்கலானது,” என்றார் அவர்.
இருப்பினும், அதிக மக்கள்தொகையையும் திறனாளர்களையும் கொண்ட பல நாடுகள், தங்களுக்குத் தேவையானவர்களை ஈர்ப்பதில் இன்னமும் சிரமப்பட்டுத்தான் வருகின்றன என்றும் பிரதமர் வோங் தெரிவித்தார்.


