பிரதமர் லாரன்ஸ் வோங்கின் தேசிய தின உரை தேசிய தினத்துக்கு முந்தைய நாள் ஆகஸ்ட் 8ஆம் தேதி ஒளிபரப்பாகவிருக்கிறது.
பிரதமராக திரு வோங் ஆற்றும் இரண்டாவது தேசிய தின உரை அது. அவர் கடந்த ஆண்டு மே 15ஆம் தேதி பிரதமராகப் பதவியேற்றார்.
நிதியமைச்சருமான திரு வோங், சிஎன்ஏ தொலைக்காட்சியிலும் சிஎன்ஏ938 வானொலியிலும் ஆங்கிலத்தில் உரையாற்றுவார் என்று பிரதமர் அலுவலகம் ஆகஸ்ட் 1ஆம் தேதி அறிக்கை வெளியிட்டது. அது மாலை 6.40 மணிக்கு ஒலி, ஒளிபரப்பப்படும்.
கலாசார, சமூக, இளையர் துறைக்கும் மனிதவளத்துக்குமான துணையமைச்சர் தினேஷ் வாசு தாஸ் பிரதமரின் செய்தியைத் தமிழில் வழங்குவார். வசந்தம் தொலைக்காட்சியிலும் ஒலி968 வானொலியிலும் அது இரவு 9 மணிக்கு ஒளி, ஒலிபரப்பப்படும்.
துணைப் பிரதமரும் வர்த்தக, தொழில் அமைச்சருமான திரு கான் கிம் யோங் சீன மொழியிலும் முஸ்லிம் விவகாரங்களுக்கான தற்காலிக அமைச்சரும் உள்துறைக்கான மூத்த அமைச்சருமான பேராசிரியர் ஃபைஷால் இப்ராஹிம் மலாய் மொழியிலும் உரையாற்றவிருக்கின்றனர்.
நான்கு அதிகாரத்துவ மொழிகளிலும் உள்ள தேசிய தின உரையைப் பிரதமர் அலுவலக இணையப்பக்கத்திலும் அதன் யூடியூப் பக்கத்திலும் ஒளிபரப்புக்குப் பின் காணலாம்.

