பலரின் செல்லப் பிள்ளையான ஆ மெங் எனும் மனிதக் குரங்கின் கொள்ளுப் பேரனை வரவேற்றுள்ளது மண்டாய் வனவிலங்குக் காப்பகம்.
கடந்த மார்ச் மாதம் 18ஆம் தேதி மண்டாய் வனவிலங்குக் குழுமம், சார்லி, ஷோமெல் மனிதக் குரங்குத் தம்பதியையும் அவர்களின் குழந்தை அயானையும் வரவேற்றது. அயான், தம்பதியின் முதல் குழந்தையாகும்.
அயான், அறுவை சிகிச்சை மூலம் செயற்கைக் கருவுருதல் முறையின் வாயிலாகப் பெற்றெடுக்கப்பட்டது.
மண்டாயில் அறுவை சிகிச்சை மூலம் ஒரு விலங்குக் குட்டியைப் பெற்றெடுத்துள்ளது இதுவே முதன்முறை. பிரசவத்தின்போது சிக்கலை ஏற்படுத்தக்கூடிய நஞ்சுக்கொடி கீழ் இறங்குதல் ‘பிளசென்டா பிரீவியா’ பிளசென்டா பிரேவியா (placenta praevia) எனும் பிரச்சினைக்கு ஷோமெல் ஆளானதைத் தொடர்ந்து அறுவை சிகிச்சை தேவைப்பட்டது.
அயான் என்றால் அரபு மொழியில் நல்லாசி என்று பொருளாகும்.
இதுகுறித்துப் பேசிய மண்டாய் வனவிலங்குக் காப்பகத்தின் விலங்கு சுகாதாரப் பராமரிப்பு மற்றும் அறிவியல் திட்டங்கள் பிரிவின் துணைத் தலைவர் ஹெங் யிரூய், “எங்களுக்குத் தெரிந்தவரை இது, செயற்கை முறை கருவுருதல், பிளசென்டா பிரேவியா, வெற்றிகரமான சிகிச்சை ஆகிய மூன்றையும் கடந்த, பதிவுகளில் இடம்பெற்றுள்ள முதல் மனிதக் குரங்கு பிரசவமாகும்,” என்று தெரிவித்தார்.

