ஆயர் ராஜா விரைவுச் சாலையில் திங்கட்கிழமை (மே 11) நேர்ந்த விபத்தில் 17 பேர் காயமுற்று மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அவர்களில் சேதமடைந்த வாகனங்களுக்குள் சிக்கி இருந்த மூவர், சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினரால் மீட்கப்பட்டனர்.
கொள்கலன்களை இழுத்துச் செல்லும் கனரக வாகனமும் (டிரைலர்), மூன்று லாரிகளும் சம்பந்தப்பட்ட விபத்து குறித்து, அதேநாள் இரவு 9.25 மணியளவில் தகவல் கிடைத்ததாக எஸ்சிடிஎஃப் படை தெரிவித்தது. அதனைக் காவல்துறை உறுதிப்படுத்தியது.
வாகனங்களில் சிக்கியிருந்த மூவரைக் குடிமைத் தற்காப்புப் படையினர் மீட்புக் கருவிகளைக் கொண்டு வெளியேற்றினர். விபத்து துவாஸ் நோக்கிச் செல்லும் ஆயர்ராஜா விரைவுச் சாலையில், கார்ப்பரேஷன் ரோட்டுக்கு இட்டுச் செல்லும் துணைச் சாலைக்கு முன்பாக நடந்தது.
அறுவர் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்கும் மேலும் 11பேர் இங் டெங் ஃபோங் மருத்துவமனைக்கும் அழைத்துச்செல்லப்பட்டனர்.
ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டக் காணொளியில், பல வாகனங்கள் விரைவுச்சாலையின் இடப்பக்கமாக நிறுத்தப்பட்டிருந்தன. மற்ற வாகனங்களும் செல்லமுடியாத வகையில் தடுக்கப்பட்ட அந்த இரு சாலைத் தடங்களில் இருந்த அவற்றில் மருத்துவ உதவி வாகனங்களும் தீயணைப்பு வண்டியும் அடங்கும்.
காவல்துறையினர் போக்குவரத்துக்கு வழிகாட்டிய நிலையில் குடிமைத் தற்காப்புப் படையினர் காயமடைந்தோருக்கு உதவியது காணொளியில் தெரிந்தது.
காவல்துறை விசாரணை தொடர்கிறது.

