நீராவி மூலம் கிருமிகளை நாசம் செய்யக்கூடிய புறா முத்திரை கொண்ட ‘மதர் அண்ட் பேபி கேர்’ கருவி சிங்கப்பூர் விற்பனைச் சந்தையிலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
‘பிஜன் சூப்பர் ஃபாஸ்ட் ஸ்டீம் அண்ட் ஸ்டெரிலைசர்’ என்ற அந்தக் கருவி வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 30ஆம் தேதி) மீட்டுக்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதைப் பயன்படுத்துவதால் அதிக வெப்ப பாதிப்புக்கு ஆளாகி அந்தக் கருவியின் சில பாகங்கள் உருகிவிடக்கூடிய அபாயம் உள்ளதால் எச்சரிக்கை நடவடிக்கையாக அது மீட்டுக்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு ஏற்படக்கூடிய சாத்தியக்கூறு அதிகம் இல்லை என்றபோதிலும் அதைப் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்தும்படி அதைத் தயாரிக்கும் ஜப்பானிய உற்பத்தியாளர்கள் பரிந்துரைப்பதாக பிஜன் நிறுவனத்தினர் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளனர்.
நீரை கொதிக்க விட்டு அதிலிருந்து கிளம்பும் ஆவியைக் கொண்டு அந்தக் கருவிக்குள் இருக்கும் பொருள்களிலுள்ள கிருமிகள், நுண்ணுயிரிகள் ஆகியவற்றை அந்தக் கருவி அழிக்கும் என்று அந்தக் கருவியைத் தயாரிக்கும் பிஜன் (புறா) முத்திரை கொண்ட அதன் உற்பத்தியாளர்கள் தங்கள் இணையத்தளத்தில் தெரிவித்துள்ளனர்.
வெள்ளிக்கிழமைவரை (ஆகஸ்ட் 30ஆம் தேதி) அந்தக் கருவியில் அதிக வெப்பத்தினால் பாதிப்படைந்த 26 சம்பவங்கள் தெரியவந்ததாக அதன் உற்பத்தியாளர்கள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

