ஜூரோங் ஈஸ்ட்டில் உள்ள வெஸ்ட் கேட் டவரில் வேலை செய்து கொண்டிருந்தபோது கீழே விழுந்ததால் நடமாட முடியாமல் முடங்கிப்போன பங்ளாதேஷ் ஊழியருக்கு 971,000 வெள்ளி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
2018 ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி அந்தக் கட்டடத்தில் வேலை செய்துகொண்டிருந்த போது ஜனேத் என்னும் அந்த ஆடவர் 3.7 மீட்டர் உயரத்தில் இருந்து கீழே விழுந்தார்.
குளிரூட்டியைச் சோதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது அவர் ஏணியில் இருந்து விழுந்தார்.
முதுகில் ஏற்பட்ட காயத்தால் ஆடவரின் கழுத்திற்குக் கீழுள்ள உடல் பகுதி முடங்கிப் போனது. அதனால் அவர் படுத்தபடுக்கையானார்.
ஜனேத்திற்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையில் கிட்டத்தட்ட 207,000 வெள்ளி அவருக்கு மருத்துவம் பார்த்த உள்ளூர் மருத்துவமனைகளுக்கு கொடுக்கப்படும்.
தற்போது பங்ளாதேஷில் உள்ள ஜனேத், சிங்கப்பூரில் 243 நாள்கள் சிகிச்சை பெற்றார். அதற்கான செலவுதான் இந்த 207,000 வெள்ளி.
47 வயதான ஜனேத்தின் முன்னாள் முதலாளியான Newtec Engineering நிறுவனம் அவருக்குத் தேவையான காப்பீடுகளை வழங்காததற்காகவும் அவருக்கான மருத்துவக் கட்டணங்களைச் செலுத்தாததற்காகவும் நீதிமன்றத்தில் வழக்கை எதிர்நோக்குகிறது.


