பொய்யான அறிக்கைகளைப் பயன்படுத்தி, ஓர் ஆடவர் பெண் ஒருவருடன் இணைந்து செயல்பட்டு இரண்டு வங்கிகளை ஏமாற்றினார்.
கடந்த 2014ஆம் ஆண்டு முதல், அவர் அந்த வங்கிகளை $1,218,000 பெறுமானமுள்ள கடன்களை வழங்கச் செய்தார்.
‘ஸ்டாண்டர்ட் சார்டர்ட்’ வங்கி (சிங்கப்பூர்) $178,000ம், ‘மேபாங்க்’ (சிங்கப்பூர்) வங்கி எஞ்சிய $1.04 மில்லியனும் ஏமாற்றப்பட்டன.
முகம்மது ஸாக்கி லீ என்றழைக்கப்படும் லீ பெங் யோங், 55, மீது ஏமாற்றியதற்காக முன்னதாக சுமத்தப்பட்ட ஆறு குற்றச்சாட்டுகள் நிரூபணமாயின.
லீக்கு ஐந்தாண்டுகள் ஆறு மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்குமாறு அரசுத் தரப்பு துணை வழக்குரைஞர் சியா வென்ஜியே நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார். குற்றவாளி எந்த இழப்பீட்டையும் கொடுக்கவில்லை என்றார் அவர்.
அந்த வங்கிகள் ஒரு மில்லியன் வெள்ளிக்கும் மேல் இழந்ததையும் அவர் குறிப்பிட்டார்.
இருப்பினும், தற்காப்பு வழக்கறிஞர் ஜோஷுவா டோங், லீக்கு ஓராண்டு இரண்டு மாதங்கள் சிறைத் தண்டனை கொடுக்கும்படி கேட்டுக்கொண்டார்.
பொய்யான ஆவணங்களைத் தயாரித்ததில் தமது கட்சிக்காரர் ஈடுபட்டிருந்ததற்கான ஆதாரங்கள் இல்லை என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
லீக்கு நவம்பரில் தண்டனை விதிக்கப்படும்.

