அண்மையில் முக்கிய மைல்கல் ஒன்றை ஜோகூர் பாரு-சிங்கப்பூர் ஆர்டிஎஸ் இணைப்புத் திட்டம் அடைந்தது.
இரு தரப்பையும் இணைக்கும் 17 மீட்டர் கான்கிரீட் கட்டுமானம் முழுமை பெற்றது. அதை ஜனவரி 11ஆம் தேதியன்று அனுசரிக்கும் விதமாக சிங்கப்பூரின் பிரதமர் லீ சியன் லூங், மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் இருவரும் சந்தித்துக்கொண்டனர்.
எல்லைகள் கடந்த ரயில் இணைப்புக்கான பணிகள் மூவாண்டுக்கு முன் தொடங்கியதை அடுத்து, உட்லண்ட்ஸ் நார்த் எம்ஆர்டி நிலையத்திற்கு அருகே இருந்த ஒரு வெற்று நிலம் பரபரப்பான ஒரு கட்டுமானத் தளமாக மாறிவிட்டது.
2026ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஜோகூர்பாரு-சிங்கப்பூர் விரைவு ரயில் சேவை (ஆர்டிஎஸ்) அதன் செயல்பாடுகளைத் தொடங்கும்போது சுமார் 30 ஹெக்டர், அதாவது 42 காற்பந்துத் திடல்களின் அளவிலான இந்த இடத்தில்தான் 40,000 பேர் தினமும் வந்து போவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆர்டிஎஸ் இணைப்புத் திட்டம் தொடர்பில் சிங்கப்பூரில் பணிகளை மேற்கொள்வதற்காக 1,000க்கும் மேற்பட்டோர் அமர்த்தப்பட்டுள்ளனர்.
கட்டுமானப் பணிகள் தீவிரமடைய, ஊழியர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
தொடக்கத்தில் உட்லண்ட்ஸ் நார்த் தளத்தில் கட்டுமானப் பணிகள் தொடங்குவதற்கு முன், அப்பகுதியில் இருந்த கடினத்தன்மை வாய்ந்த கிரானைட் கருங்கற்கள், வெடிபொருள்களைக் கொண்டு சிதைக்கப்பட்டது.
இந்த வெடிப்புகளால் எதிரே உள்ள தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் தடத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றும் உறுதிசெய்யப்பட்டது.
ஆர்டிஎஸ் லிங்க் நிலையத்துடன் உட்லண்ட்ஸ் நார்த் வட்டாரத்தில் மூன்று மாடிகளுடைய சுங்க, குடிநுழைவு மற்றும் தனிமைப்படுத்தல் (சிஐகியு) கட்டடம் ஒன்றும் கட்டப்படும்.
ஒரு எம்ஆர்டி நிலையத்தைக் காட்டிலும் இந்த கட்டடம் 10 மடங்கு பெரிதாக இருக்கும்.
சிஐகியு கட்டடத்தை ஆர்டிஎஸ் லிங்க் நிலையத்துடன் இணைக்கும் விதமாக அடித்தளம் மூன்றில் நிலத்தடி இணைப்புப்பாதை ஒன்றும் உருவாக்கப்படும்.
பெரிய, அகன்ற படகுகளின் வழி சரக்கு வாகனங்கள், கட்டுமான உபகரணங்கள், பொருள்கள் போன்றவை கொண்டுசெல்லப்படும்.
சிங்கப்பூர், மலேசிய அரசாங்கங்கள் இந்தப் பெருந்திட்டத்தைக் குறிப்பிடத்தக்க ஒரு நிகழ்வாகக் கருதுகின்றன.
கடற்பாலத்தில் நெரிசலை 35% குறைக்க இத்திட்டம் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.