பார்ட்லி வட்டாரத்தில் இருக்கும் கட்டடம் ஒன்றின் வெளிப்புறத்தில் அமைக்கப்பட்டிருந்த உலோகத் தூண்களின் பாகங்கள் செவ்வாய்க்கிழமையன்று (மார்ச் 11) இடிந்து கீழே விழுந்தன. இச்சம்பவத்தில் அக்கட்டடத்தின் தரைத்தளத்தில் இருந்த கடையில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் நூலிழையில் உயிர்தப்பினார்.
24 புதிய தொழிலியல் சாலையில் உள்ள ‘இன்ஸ்பேஸ்’ வர்த்தக மையத்திற்கு அருகே இருக்கும் சாலை முழுவதும் உலோகத் தூண்களின் பாகங்கள் சிதறிக் கிடப்பதைச் சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் காண முடிந்தது.
இடிபாடுகளில் கிட்டத்தட்ட 2 மீட்டர் அல்லது அதற்கு மேற்பட்ட நீளம் கொண்ட உலோகப் பொருள்கள் இருந்தன. அவை கட்டட முகப்பின் மேல் தளங்களின் ஒரு பகுதியிலிருந்து உடைந்து விழுந்ததாகக் கூறப்பட்டது.
பிற்பகல் 3.50 மணியளவில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் சம்பவ இடத்திற்குச் சென்றபோது, சாலையில் சிதறிக் கிடந்த பொருள்கள் ஏற்கெனவே அகற்றப்பட்டிருந்தன. சாலைக்கு அருகிலுள்ள புல்வெளிக்கும் கட்டடத்தின் தரைத்தளத்தில் உள்ள வாகன நிறுத்துமிடங்களுக்கும் அவை மாற்றப்பட்டிருந்தன.
மாலை 6 மணியளவில் வெளியான இன்ஸ்டகிராம் பதிவில், கட்டட, கட்டுமான ஆணையமும் காவல்துறையினரும் சம்பவம் நடந்த கட்டடத்தையும் அதன் அருகிலுள்ள பகுதிகளையும் தங்களின் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.