பிடோக் குடியிருப்பாளர் ஒருவர் 2017ஆம் ஆண்டிலிருந்து சீனப் புத்தாண்டின்போது அழகிய அலங்காரங்களைக் கொண்டு, தாம் வசிக்கும் மாடியை அலங்கரித்து தமது அண்டைவீட்டாரை மகிழ்வித்து வருகிறார்.
இவ்வாண்டு குதிரை ஆண்டு என்பதால் 18 குதிரைச் சிலைகளை வாங்கியதாக லிண்டா எனும் அந்தக் குடியிருப்பாளர் ‘மதர்ஷிப்’ ஊடகத்திடம் தெரிவித்தார்.
வெவ்வேறு அளவிலான குதிரைச் சிலைகளைக் கொண்டு உட்கூரையும் தாழ்வாரமும் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
அதற்காக லிண்டா மொத்தம் $800 செலவிட்டார். அலங்காரம் செய்வதற்குக் கிட்டத்தட்ட இரண்டு வாரம் ஆனதாக லிண்டா கூறினார். 65 வயதான அவர் சாங்கி விமான நிலையத்தில் பணிபுரிகிறார்.
அலங்காரப் பணிகளில் தம் மகனும் உதவியதாக லிண்டா கூறினார். ஒவ்வொரு சீனப் புத்தாண்டுக்கும் விழாக்கால குதூகலத்தைப் பரப்பி, அவர் தமது அண்டைவீட்டாரை மகிழ்விப்பார்.
மலாய் முஸ்லிம்களான தமது அண்டைவீட்டாருக்குத் தமது அலங்காரங்களை மிகவும் பிடிக்கும் என்றார் அவர்.
அண்டை வீட்டாரின் மகளான நதிரா, ஒவ்வோர் ஆண்டும் அலங்காரங்களைப் படம் எடுக்க உதவிசெய்வதாக லிண்டா குறிப்பிட்டார்.


