‘வாட்ஸ்அப்’ பயனர்களின் கணக்குகளை மோசடிக்காரர்கள் அணுகுவதற்கு ஏதுவான மோசடி இணையப் பக்கங்கள் குறித்துப் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனக் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து வெள்ளிக்கிழமை அறிக்கை ஒன்றை அது வெளியிட்டது.
பாதிக்கப்பட்டோர், கணினியில் ‘வாட்ஸ்அப்’பைப் பயன்படுத்த விரும்பி ‘வாட்ஸ்அப் வெப்’ என்று இணையத்தில் தேடினர்.
தேடல் முடிவில் முதலாவதாகக் காணப்பட்ட இணைய முகவரியை, சரிபார்க்காமல் அவர்கள் பயன்படுத்தினர்.
அந்த இணைப்பு அவர்களை மோசடி இணையத்தளங்களுக்கு இட்டுச்சென்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இணைப்பில் வாட்ஸ்அப்பின் கியூஆர் குறியீடு காணப்பட்டது. கைத்தொலைபேசி மூலம் அந்தக் குறியீட்டைப் பயன்படுத்தியபோது, பாதிக்கப்பட்டவர்களின் வாட்ஸ்அப் கணக்கை மோசடிக்காரர்கள் ஊடுருவியதாகக் காவல்துறை கூறியது.
அதன் பிறகு மோசடிக்காரர்கள், பாதிக்கப்பட்டவர்களின் தொடர்புகளுக்குத் தனிப்பட்ட விவரங்கள் கேட்டும் குறிப்பிட்ட வங்கிக் கணக்கிற்குப் பணப் பரிமாற்றம் செய்யுமாறும் குறுஞ்செய்தி அனுப்பி மோசடியில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.