கார்மீது உட்கார்ந்திருந்த சிறுவர்கள்; கெட்கோ எச்சரிக்கை

கார்மீது உட்கார்ந்திருந்த சிறுவர்கள்; கெட்கோ எச்சரிக்கை

2 mins read
d05a4e18-2732-4a65-abaf-ac1d508c8175
நான்கு குழந்தைகள் கார் மேற்கூரை வழியாக தலையை நீட்டிக் கொண்டிருந்தனர். - படம்:  SGFOLLOWSALL / டெலிகிராம்

கார்ப் பகிர்வு நிறுவனமான கெட்கோ கார்மீது சிறுவர்கள் இருந்த காட்சி சமூக ஊடகங்களில் பரவி பலரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இதையடுத்து பாதுகாப்பற்ற முறையில் வாகனத்தை ஓட்டினால் அபராதம் விதிக்கப்படும் என்று அந்நிறுவனம் எச்சரித்துள்ளது.

நான்கு பிள்ளைகள் காருக்கு மேல் தலையை நீட்டிக் கொண்டிருக்கும் படம் சமூக ஊடகங்களில் பரவி பல்வேறு விமர்சனங்களை எழுப்பிய நிலையில் அது பற்றி கெட்கோ நிறுவனத்திடம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் விவரம் கேட்டது.

ஆகஸ்ட் 2ஆம் தேதி ‘எஸ்ஜி ரோட் விஜிலாண்டே’ என்ற ஃபேஸ்புக் குழுவில் பதிவேற்றப்பட்ட புகைப்படத்தில் ஒரு கறுப்பு நிற மாஸ்டா காரிலிருந்து குழந்தைகள் தங்களின் தலையை வெளியே நீட்டியபடி இருப்பதைக் காண முடிகிறது. காரின் பக்கவாட்டில் ஒட்டப்பட்டிருந்த சின்னம் அது கெட்கோ நிறுவனத்திற்குச் சொந்தமானது என்பதைக் காட்டியது.

இடப்பக்கத்தில் இருந்த ஒரு குழந்தை, காரின்மீது உட்கார்ந்தபடி தனது கால்களை உள்ளே தொங்கவிட்டிருப்பதுபோலத் தெரிகிறது. அந்த நான்கு குழந்தைகளில் யாருமே இருக்கை வார் அணியவில்லை.

சிங்கப்பூரின் சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின்கீழ், ஓட்டுநர் உட்பட வாகனத்தில் பயணம் செய்யும் அனைவரும் இருக்கை வார் அணிவது கட்டாயமாகும். மேலும் 1.35 மீட்டருக்குக் குறைவான உயரம் கொண்ட பயணிகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட குழந்தை பாதுகாப்புச் சாதனம் அல்லது இருக்கை வார் பொருத்தப்பட்டிருப்பதை ஓட்டுநர்கள் உறுதிசெய்யவேண்டும்.

இதைச் செய்யத் தவறும் குற்றவாளிகளுக்கு மூன்று மாதங்கள் வரை சிறைத்தண்டனை, $1,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

இந்தப் புகைப்படம் 20 மணி நேரத்தில் 200க்கும் மேற்பட்ட விருப்பங்களைப் பெற்றது. அது மட்டுமல்லாமல் சாலைப் பாதுகாப்பு குறித்த விவாதத்தையும் அது கிளப்பியது.

“இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய வாடிக்கையாளரை நாங்கள் தொடர்புகொண்டுள்ளோம். இந்த விதிமீறலை அவர்களிடம் சுட்டிக்காட்டியுள்ளோம்,” என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கெட்கோ தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்