சிங்கப்பூர், மலேசிய சட்ட அமலாக்க அமைப்புகளுக்கு இடையேயான நீண்டகால, நெருக்கமான உறவு, மார்ச் 10ஆம் தேதி அன்று, சிங்கப்பூர் கடலோரக் காவற்படையினர் தங்கள் ஜோகூர் சகாக்களைக் கடலில் ஒன்றாக நோன்பு துறக்க (இஃப்தார்) சந்தித்தபோது மேலும் வலுப்பெற்றது.
ஜோகூர் கடல்துறை காவற்படையின் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட ஒரு காணொளியில், ஜோகூர் கடல்துறை காவற்படையின் மூன்று சுற்றுக்காவல் படகுகள் ஜோகூர் கடற்கரையிலிருந்து ஒன்றோடொன்று வருவதைக் காண முடிந்தது.
தூரத்தில் சூரியன் மறையும்போது, சிங்கப்பூர் கடலோரக் காவற்படையின் இரண்டு சுற்றுக்காவல் படகுகள் மலேசிய சுற்றுக்காவல் படகுகளை அணுகி அவற்றுடன் சேர்ந்து கொண்டன.
சிறிது நேரம் கழித்து, சிங்கப்பூர் கடலோரக் காவற்படையின் தளபதியின் மூத்த உதவி காவல் ஆணையர் ஆங் எங் செங் மலேசியப் படகுகள் ஒன்றில் ஏறினார்.
அவரை புக்கிட் அமான் கடல்துறை காவற்படையின் உதவி காவல்துறை ஆணையர் (ஏசிபி) ஸுல்கிஃப்லி மஹ்மூத், ஜோகூர் கடல்துறை காவற்படையின் (2ஆம் வட்டாரம்) ஏசிபி நூர் அஸ்மான் ஜமால் ஆகியோர் வரவேற்றனர்.
இரு தரப்பிலிருந்தும் சட்ட அமலாக்க அதிகாரிகள் ஒன்றாக நோன்பு துறப்பை முடித்துக்கொண்டு, சிங்கப்பூர் அதிகாரிகள் தங்கள் படகில் புறப்படுவதற்கு முன்பு நினைவுப் பரிசுகளைப் பரிமாறிக்கொண்டனர்.
“இந்தப் பரிமாற்றம் மலேசியா மற்றும் சிங்கப்பூரின் கடற்பகுதியின் பாதுகாப்பையும் இறையாண்மையையும் உறுதி செய்வதற்காக எங்கள் அமைப்புகளுக்கு இடையேயான நட்புணர்வையும் உத்திபூர்வ ஒத்துழைப்பையும் வலுப்படுத்துகிறது.
தொடர்புடைய செய்திகள்
“எல்லைத் தாண்டிய குற்றம், பொருள்கள் கடத்தல், சட்டவிரோதக் குடியேறிகளின் நுழைவு போன்ற பல்வேறு பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் கையாள்வதிலும் இந்த ஒத்துழைப்பு முக்கியமானது,” என்று ஜோகூர் கடல்துறை காவற்படை தனது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டிருந்தது.
2024ஆம் ஆண்டு அளித்த ஒரு நேர்காணலில், ஜோகூர் கடல்துறை காவல்துறை (2ஆம் வட்டாரம்) தளபதி ஏசிபி முஹம்மது ஸைலானி அப்துல்லா, தனது அமைப்பு எப்போதும் சிங்கப்பூரின் கடலோரக் காவற்படையுடன் ஒத்துழைத்து எல்லையில் அமைதியைப் பேண தகவல்களைப் பரிமாறிக் கொண்டதாகக் கூறினார்.
“நாங்கள் மிகவும் நெருக்கமான, இணக்கமான உறவுகளைக் கொண்டுள்ளோம். எல்லையில் சிறப்பாகச் செயல்பட தகவல்களைப் பகிர்ந்துகொள்கிறோம்,” என்று ஏசிபி முஹம்மது ஸைலானி அப்போது கூறியதாக பெர்னாமா தெரிவித்தது.

