பாதுகாப்பு அதிகாரிக்கு கையூட்டு கொடுக்க ஏற்பாடு செய்த சிகரெட் கடத்தல் கும்பலைச் சேர்ந்த உறுப்பினருக்கு எட்டு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
ஜாலான் புரோவில் உள்ள சிங்கப்பூர் பெஞ்சுரு முனையத்தில் பணியாற்றிய பாதுகாப்பு அதிகாரியான அஹமட் காமிசுக்கு மொத்தம் 1,000 வெள்ளி வரை லஞ்சம் கொடுக்க மற்றவர்களுடன் சேர்ந்து ரோஸ்லான் சிலாமட், 65, ஏற்பாடு செய்துள்ளார்.
அப்போது எங் ஹப் ஷிப்பிங் நிறுவனத்தில் அவர் பணியாற்றினார்.
அந்தச் சமயத்தில் பலருடன் சேர்ந்து 2022ஆம் ஆண்டில் நான்கு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் அவர் அஹமட் காமிசுக்கு லஞ்சம் கொடுக்க ஏற்பாடு செய்தார்.
இதற்கு கைமாறாக, பைகோ கார்ட்ஸ் நிறுவனத்தில் 2018 முதல் 2023 வரை பணியாற்றிய அஹமட், தான் பணியாற்றிய முனையம் வழியாகக் கடத்தல் சிகரெட்டுகளை சிங்கப்பூருக்குள் கொண்டு வர கும்பலை அனுமதித்தார்.
இருவரும் சிங்கப்பூரர்கள். ரோஸ்லானுக்கு ஜூலை 17ஆம் தேதி எட்டு வாரச் சிறைத்தண்டனையும் 5,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டது.
அவர் மீது 350 வெள்ளி தொடர்பிலான இரு லஞ்சக் குற்றச்சாட்டுகளும் கடத்தல் சிகரெட் தொடர்பாக மற்றொரு குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டன. இரண்டு குற்றச்சாட்டுகளையும் அவர் ஒப்புக் கொண்டார்.
அஹமட், அப்போதைய வயது 54. மூன்றாவது நபரான இந்திய நாட்டைச் சேர்ந்த தெக்கு ராஜா சுரேஷ், அப்போதைய வயது 41 ஆகிய இருவரும் முன்னதாக நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு குற்றவாளிகள் எனத் தீர்ப்பு அளிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
சிகரெட் கடத்தலில் கிடைத்த லாபத்தை கும்பல் உறுப்பினர்கள் பகிர்ந்துகொண்டனர். அஹமட்டுக்கு உதவி செய்ததற்காக ஒவ்வொரு முறையும் 50 முதல் 200 வெள்ளி வரை ரொக்கம் வழங்கப்பட்டது.

