எதிர்வரும் 2025ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டம் தொடர்பாகப் பொதுமக்களின் கருத்துகளை நிதி அமைச்சு நாடுகிறது.
கருத்துகளை முன்வைக்குமாறு சிங்கப்பூரர்களுக்கு அமைச்சு அழைப்பு விடுத்துள்ளது.
அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பான கருத்துகளை தனிநபர்கள், அமைப்புகள், வர்த்தகங்கள் 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2ஆம் தேதியிலிருந்து 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12ஆம் தேதி வரை முன்வைக்கலாம்.
எஸ்ஜி60: ஒன்றிணைந்து சிங்கப்பூரை மேம்படுத்துதல், துடிப்பான வர்த்தகச் சூழலை உருவாக்குதல், ஊழியர்களுக்கான வேலை வாய்ப்புகள், அவர்களது திறன்களை மேம்படுத்தும் வாய்ப்புகளை வழங்குதல், பல்வேறு வாழ்க்கைக் கட்டங்களில் இருக்கும் சிங்கப்பூரர்களுக்கு ஆதரவு நல்குதல் போன்ற கருப்பொருள்கள் தொடர்பாக அடுத்த ஆறு வாரங்களுக்கு சிங்கப்பூரர்கள் தங்கள் கருத்துகளை முன்வைக்கலாம்.
www.singaporebudget.gov.sg, go.gov.sg/budget2025, www.facebook.com/REACHSingapore, www.instagram/reachsg, go.gov.sg/akksyvb25 ஆகிய தளங்கள் மூலம் சிங்கப்பூரர்கள் தங்கள் கருத்துகளைச் சமர்ப்பிக்கலாம்.
பொதுமக்களின் கருத்துகளைப் பெற 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9ஆம் தேதியன்று காலை 11.30 மணியிலிருந்து பிற்பகல் 2 மணி வரை, ஒன் ராஃபிள்ஸ் பிளேசில், ரீச் அமைப்பு கருத்துச் சேகரிப்பு நிகழ்வு ஒன்றை நடத்துகிறது.