இவ்வாண்டின் வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் பற்றுச்சீட்டுகளைப் பற்றியது மட்டுமல்ல, எவரும் பின்தங்கிவிடாமல் இருப்பதை உறுதிசெய்ய சமுதாய ஆதரவு அமைப்புமுறையையும் பொருளியலையும் வலுப்படுத்த சிங்கப்பூர் முன்னெடுக்கும் நடவடிக்கைகளையும் பற்றியது எனப் பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.
மார்சிலிங்-இயூ டீ குழுத்தொகுதியில் சனிக்கிழமை (பிப்ரவரி 22) நடந்த சிங்கே கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், பிப்ரவரி 18ல் அறிவிக்கப்பட்ட $143.1 பில்லியன் வரவுசெலவுத் திட்டம், நாட்டை முன்னெடுத்துச் செல்வதில் அரசாங்கத்திடம் திட்டம் இருப்பது குறித்து சிங்கப்பூரர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் என தாம் நம்புவதாகச் சொன்னார்.
வாழ்க்கைச் செலவினம் குறித்த மக்களின் கவலைகளை அரசாங்கம் அறிந்துள்ளதாகக் குறிப்பிட்ட பிரதமர் வோங், “விலைவாசி உயர்வை நீங்கள் எல்லாரும் சமாளிக்க உதவ நாங்கள் இன்னும் அதிகமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்,” என்றார்.
“அனைத்து சிங்கப்பூரர்களுக்கும் நல்ல வேலைகளையும் வாய்ப்புகளையும் தொடர்ந்து உருவாக்க, குறுகியகாலத் திட்டங்களுக்கு அப்பாற்பட்டு சமுதாய ஆதரவு முறையையும் பொருளியலையும் வலுப்படுத்த நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
“இதில் எவரும் பின்தங்கிவிடவில்லை. ஆண்டுக்கு ஆண்டு சிங்கப்பூர் தொடர்ந்து நன்றாகச் செயல்படுவதை உறுதிசெய்ய எங்களிடம் ஒரு திட்டம் உள்ளது,” என்று பிரதமர் வோங் எடுத்துரைத்தார்.
கூடுதல் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள விரும்பும் குடும்பங்கள், உடற்குறையுள்ளோர், எளிதில் பாதிப்புக்கு ஆளாகக்கூடியோர் போன்ற பிரிவினருக்கும் வரவுசெலவுத் திட்டம் ஆதரவளிக்கிறது.
இன்னும் பிரச்சினைகளுக்கும் கொந்தளிப்புக்கும் உள்ளான உலகில், நாம் நம்பிக்கையுடன் முன்னேறிச் செல்வதோடு, சிறந்த எதிர்காலத்தை எதிர்நோக்கலாம் என்றும் அவர் கூறினார்.
மார்சிலிங்-இயூ டீ குழுத்தொகுதி எம்.பி.க்களான வடமேற்கு மாவட்ட மேயர் அலெக்ஸ் யாம், தற்காப்பு, மனிதவள மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது, திருவாட்டி ஹனி சோ ஆகியோர் பிரதமர் வோங்குடன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.