புக்கிட் பாஞ்சாங் இலகு ரயில் சேவை ஜூலை 19ஆம் தேதி பிற்பகல் 2.45 மணிக்கு மின்சாரக் கோளாற்றால் முழுவதுமாகத் தடைபட்டது.
ரயில் நிலையங்களுக்கிடையே நான்கு ரயில்கள் நின்றுவிட்டதாகவும் எஸ்எம்ஆர்டி ஊழியர்கள் பயணிகளை அருகிலுள்ள நிலையங்களுக்குப் பாதுகாப்பாக அழைத்துச் சென்றதாகவும் எஸ்எம்ஆர்டி நிறுவனம் ஃபேஸ்புக்கில் பதிவிட்டது.
மாலை 4.18 மணிக்கு ரயில் சேவை வழக்கநிலைக்குத் திரும்பியதாக எஸ்எம்ஆர்டி அதன் ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்தது.
சுமார் 10 நிமிடங்களுக்குப் பிறகு, சேவைத் தடையின்போது இயக்கப்பட்ட வழக்கமான இலவச இணைப்புப் பேருந்துச் சேவைகள் இனி கிடைக்காது என்று எஸ்எம்ஆர்டி தனது சமூக ஊடகப் பக்கங்களில் தெரிவித்தது.
புக்கிட் பாஞ்சாங் இலகு ரயில் சேவையில் கோளாறு இம்மாதம் இரண்டாம் முறையாக நடைபெறுகிறது. ஜூலை 3ஆம் தேதி இரண்டு மணி நேரத்துக்கு ரயில் சேவை முழுவதுமாகத் தடைபட்டது. அப்போதும் மின்சாரத் தடையே காரணம்.
சிறிய அளவிலும் ரயில் கோளாறுகள் நடந்துள்ளன.
புதன்கிழமை ஜூலை 16ஆம் தேதி இரவு கிட்டத்தட்ட 11.30 மணியளவில் புக்கிட் பாஞ்சாங் இலகு ரயில் ஒன்று, புக்கிட் பாஞ்சாங் ரயில் நிலையத்தை வந்தடைந்தபோது வழக்கத்துக்கு மாறாக, முன்னே சென்று திடீரென நின்றது. அதனால் ரயில் வண்டியே உலுக்கப்பட்டது.
கதவுகள் ரயில் தளத்துடன் சரியாகப் பொருந்தாததால் கதவுகள் திறக்கவில்லை.
தொடர்புடைய செய்திகள்
சில நிமிடங்களில் ரயில் நிலைய ஊழியர் வெளிப்புறத்திலிருந்து கதவைத் திறந்தார், தானாக ரயிலை அடுத்த நிலையம்வரை இயக்கிச் சென்றார். அதன்பின் ரயில் சீராகச் செயல்படத் தொடங்கியது.