வழக்கறிஞர் சங்கத்தில் இடம்பெற்ற வேலையிட நடத்தை தொடர்பான விசாரணையின் முடிவுகளைப் பற்றிப் பேச ரகசியச் சந்திப்பு நடத்தப்பட்டது.
வழக்கறிஞர் சங்கத்தில் வேலையிடப் பகடிவதை இடம்பெற்றதாகக் கூறப்படுவதும் அதில் அடங்கும்.
சர்ச்சைகளுக்கான மாற்றுத் தீர்வு நிலையமான மேக்ஸ்வெல் சேம்பர்சில் அச்சந்திப்பு வியாழக்கிழமை (ஆகஸ்ட் 13) நடைபெற்றது. வியாழக்கிழமை மாலை 5.30 மணிக்குத் தொடங்கிய சந்திப்பை மாலை 7 மணிக்கு முடிக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், சந்திப்பு இரவு 9.30 மணிக்குத்தான் முடிந்தது.
அதில் கலந்துகொண்ட பலர், தலைமைத்துவத்தின் தவறுகளைப் பற்றிய முழு அறிக்கையை வெளியிடுமாறு குரல் எழுப்பினர். அவ்வாறு செய்யப்படாவிட்டால் வழக்கத்துக்கு மாறான நிர்வாகக் குழுச் சந்திப்பைக் (general meeting) கூட்டும்படி குரல் எழுப்பப்படும் என்றும் அவர்கள் கூறினர்.
ஒழுங்கு நடவடிக்கை தொடர்பில் கேள்வி
தவறான நடத்தையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் முன்னாள் மூத்த ஊழியர்மீது போதுமான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படாதது குறித்து வியாழக்கிழமை நடந்த சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டதாக அதில் கலந்துகொண்ட சிலர் தெரிவித்தனர்.
வழக்கறிஞர் சங்கத்தில் பெரிய அளவில் தவறுகள் இடம்பெற்றதாகக் குற்றஞ்சாட்டி சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் 13ஆம் தேதி சட்ட அமைச்சுக்கும் மனிதவள அமைச்சுக்கும் மின்னஞ்சல் அனுப்பப்பட்டது. அதை அனுப்பியவர் தனது அடையாளத்தை வெளியிடவில்லை.
2022லிருந்து 2025ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் நடந்ததாகக் கூறப்படும் சம்பவங்கள் மின்னஞ்சலில் விவரிக்கப்பட்டன. தவறான வேலையிட நடத்தை, நிர்வாக முறையில் பலவீனங்கள், வருத்தங்கள் சரியாகக் கையாளப்படாதது போன்றவை தொடர்பான விவகாரங்கள் அவற்றில் அடங்கும்.
அதனைத் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது.
இணையப் பதிவு
மின்னஞ்சல் அனுப்பப்பட்ட அதே மாதம், வழக்கறிஞர் சங்கத்தில் வேலையிடப் பகடிவதைச் சம்பவங்கள் இடம்பெற்றதாகக் குற்றஞ்சாட்டி இணையத்தில் பதிவிடப்பட்டது.
சங்கத்தில் பணியாற்றிய 70க்கும் மேற்பட்ட முழுநேர ஊழியர்களில் மூன்றில் ஒரு பங்குக்கும் மேலானோர் சென்ற ஆண்டு பணியிலிருந்து விலகிக்கொண்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் தெரிவிக்கப்பட்டது. முன்னாள் ஊழியர்கள், தற்போதைய ஊழியர்கள் அத்தகவலைத் தெரிவித்தனர்.
இம்மாதம் 5ஆம் தேதி நாடாளுமன்றக் கேள்விக்கு எழுத்துபூர்வமாகப் பதிலளித்த சட்ட அமைச்சர் எட்வின் டோங், வழக்கறிஞர் சங்கத் தலைமைத்துவம் குறிப்பிடத்தக்க அளவில் பொறுப்பை நிறைவேற்றாதது விசாரணையில் தெரியவந்ததாகக் கூறினார்.


