ஈசூன் பார்க் உணவங்காடி நிலையத்தைப் புதிய நிறுவனம் ஒன்று நடத்தவிருக்கிறது.
வரும் ஜூலை மாதம் 20ஆம் தேதியிலிருந்து அந்த உணவங்காடி நிலையத்தை நடத்த கேனப்பி ஹாக்கர்ஸ் குரூப் எனும் குழுமம் நியமிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தேசிய சுற்றுப்புற அமைப்பு, “கூடுதலானோரை ஈர்க்கவும் வாடிக்கையாளர்கள், கடைக்காரர்கள் இருதரப்பினருக்கும் மேலும் பொலிவான உணவங்காடி நிலைய அனுபவத்தை உருவாக்கித்தரவும் கேனப்பி புதிய யோசனைகளைக் கொண்டுவரும்,” என்று செவ்வாய்க்கிழமை (மே 26) ஃபேஸ்புக்கில் பதிவிட்டது. உணவங்காடியில் தற்போது செயல்படும் கடைக்காரர்கள் கேனப்பி நிர்வாகத்தின்கீழ் தொடர்ந்து கடை நடத்தலாம் என்றும் அமைப்பு குறிப்பிட்டது.
ஈசூன் பார்க் உணவங்காடி நிலையத்தின் இணையத்தளத்தில் இடம்பெறும் தகவல்களின்படி அதில் 43 கடைகளும் 800 இருக்கைகளும் உள்ளன.
பிராட்வே ஃபூட் சென்டர், ஃபூட்கல் சோஷியல் என்டர்பிரைஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் ஈசூன் பார்க் உணவங்காடி நிலையத்தை நிர்வகிக்க முன்வந்தது அரசாங்க ஒப்பந்தப் புள்ளி ஆவணங்களில் தெரியவந்தது. ஈசூன் பார்க் உணவங்காடியைத் தற்போது நடத்தும் டிம்பர்+ ஹாக்கர்ஸ் நிறுவனமும் அவற்றில் அடங்கும்.
கேனப்பி முதலில் மூவாண்டுகள் வரை ஈசூன் பார்க் உணவங்காடியை நடத்தும். பிறகு அந்த ஒப்பந்தம் ஆறு ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படலாம் என்று ஒப்பந்தப் புள்ளி ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

