கேப்பிட்டாலேண்ட் இந்தியா டிரஸ்ட் (கிளின்ட்) அறநிதி, தான் கையாளும் தரவு நிலைய முதலீடுகளில் மூன்றில் ஒரு பங்கை கேப்பிட்டாலேண்ட் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனத்திடம் ஒப்படைக்கவுள்ளது. கேப்பிட்டாலேண்ட் இன்வெஸ்ட்மென்ட், நிதி வழங்கி கிளின்ட்டை நடத்தும் நிறுவனமாகும்.
கேப்பிட்டாலேண்ட் இன்வெஸ்ட்மென்ட், இந்தியாவில் புதிய அறநிதி ஒன்றைத் தொடங்குகிறது. பெங்களூர், சென்னை, ஹைதராபாத், நாவி மும்பை ஆகிய நகரங்களில் உள்ள நான்கு தரவு நிலையங்களை கிளின்ட் கையாள்கிறது.
அவற்றை இனி, கேப்பிட்டாலேண்ட் இன்வெஸ்ட்மென்ட் இந்தியாவில் தொடங்கவுள்ள புதிய அறநிதியைக் கையாளும் என்று கிளின்ட்டை நிர்வகிக்கும் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான கெளரி சங்கர் நாகபூஷணம், பிஸ்னஸ் டைம்ஸ் ஊடகத்துக்கு அளித்த நேர்காணலில் இதனைத் தெரிவித்தார்.
பெங்களூர், சென்னை, ஹைதராபாத், நாவி மும்பை ஆகியவற்றில் உள்ள தரவு நிலையங்கள், புதிய அறநிதியின் தொடக்க முதலீட்டு சொத்துகளாக (seed assets) விளங்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
இவ்வாண்டின் நான்காம் காலாண்டில் அந்தத் தரவு நிலைய முதலீடுகளைப் புதிய அறநிதியிடம் முழுமைாக ஒப்படைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
அதோடு, இந்தியத் தலைநகர் புதுடெல்லியை உள்ளடக்கிய தேசியத் தலைநகர் வட்டாரத்தில் நுழைய கிளின்ட் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

