சிங்கப்பூரின் கேப்பிட்டாலேண்ட் முதலீட்டு நிறுவனம் 2028ஆம் ஆண்டுக்குள் இந்தியாவிலுள்ள தனது முதலீடுகளை இரட்டிப்பாக்கத் திட்டமிட்டு உள்ளது.
இந்தியாவில் உலக முதலீட்டாளர்களின் ஆர்வம் அதிகரித்து வருவதன் ஒரு பகுதியாக சிங்கப்பூரும் அதில் பங்கேற்கிறது.
மேலும், தான் நிர்வகிக்கும் உலக முதலீட்டுப் பட்டியலைப் பரவலாக்கும் நோக்கிலும் கேப்பிட்டாலேண்ட் இந்திய முதலீட்டை அதிகரிப்பதில் கவனம் செலுத்துகிறது.
அந்நிறுவனம் தனது உலகளாவிய முதலீட்டுப் பட்டியலில் 8 விழுக்காட்டை இந்தியாவில் நிர்வகிக்கிறது.
ஆசியாவின் ஆகப்பெரிய பன்முகச் சொத்துச் சந்தைக் குழுமங்களின் ஒன்றான கேப்பிட்டாலேண்ட், தற்போது $100 பில்லியனாக வைத்துள்ள அதன் நிதிச் சொத்துகளை அடுத்த நான்கு ஆண்டுகளில் $200 பில்லியனாக அதிகரிக்கத் திட்டமிட்டு உள்ளது.
அவ்வாறு அதிகரிக்கும்போது, இந்தியாவில் முதலீடுகளை இரட்டிபாக்கும் இலக்கின் மீது அது கவனம் செலுத்தும்.
2024 ஜூன் 30 நிலவரப்படி $7.4 பில்லியன் சொத்துகளை இந்தியாவில் அந்நிறுவனம் நிர்வகிக்கிறது. அதனை 2028ஆம் ஆண்டுக்குள் கிட்டத்தட்ட இரட்டிபாக்க அது இலக்கு வகுத்து உள்ளது.

