போலந்து மற்றும் சிங்கப்பூர் அதனதன் வட்டாரத்தில் நடுவமாகத் திகழ்கின்றன. அதனால் இருநாடுகளுக்கு இடையே புதிய வர்த்தக வாய்ப்புகளை ஆராயந்து இன்னும் பலவற்றைச் செய்யலாம் என்று அதிபர் தர்மன் சண்முகரத்னம் தெரிவித்தார்.
போலந்து அதிபர் ஆண்ட்ரே டூடாவுக்கு அதிபர் தர்மன் வியாழக்கிழமை (ஜூன் 12) அரசாங்க விருந்து கொடுத்தபோது இதைத் தெரிவித்தார்.
சிங்கப்பூரும் போலந்தும் வட்டார நடுவமாக இருப்பதை முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டு ஒன்றுக்கு ஒன்று உதவ வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஐரோப்பாவின் முக்கியமான தளவாட நடுவங்களில் ஒன்றாக போலந்தும் இருப்பதைக் குறிப்பிட்ட திரு தர்மன், “போலந்து மேற்கு ஐரோப்பாவுக்கும் கிழக்கு, வடக்கு, தென்கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கும் வர்த்தகப் பாலமாக உள்ளது,” என்றார்.
போலந்தின் திறமையைச் சிங்கப்பூர் நிறுவனங்கள் கண்டுவருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
போலந்து அதிபர் ஆண்ட்ரே டூடா புதன்கிழமை (ஜூன் 11) முதல் வெள்ளிக்கிழமை (ஜூன் 13) வரை சிங்கப்பூருக்கு அதிகாரபூர்வ பயணம் மேற்கொண்டுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் சிங்கப்பூரின் 13வது ஆகப் பெரிய வர்த்தகப் பங்காளியாகப் போலந்து திகழ்கிறது. 2024ஆம் ஆண்டில், இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் 1.7 பில்லியன் டாலராக இருந்தது.