சிராங்கூனில் சனிக்கிழமை (மே 16) காலை 10.15 மணியளவில் நடந்த சாலை விபத்தில், 64 வயது கார் ஓட்டுநர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த விபத்து அப்பர் சிராங்கூன் ரோடு நோக்கி செல்லும் சிராங்கூன் ரோட்டில் நடந்தது.
வாகன ஓட்டிகளின் இணையக் குழுவொன்றில் பகிரப்பட்ட விபத்து தொடர்பான காணொளிகளில், சிராங்கூன் ரோட்டிற்கும் உட்ஸ்வில் சுரங்கப் பாதைக்கும் (Woodsville Tunnel) இடையே உள்ள தடுப்புப் பகுதிமீது, வெள்ளை நிற ‘டொயோட்டா சியெண்டா’ கார் ஒன்று மோதிச் சிதைந்திருப்பதைக் காணலாம்.
விபத்து நடந்த நேரத்தில் அப்பகுதியில் பலத்த மழை பெய்து கொண்டிருந்ததாகவும் சாலை மிகவும் ஈரப்பதத்துடன் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து ஏஷியாஒன் ஊடகத்தின் கேள்விக்குப் பதிலளித்த காவல்துறை, விபத்துக்குள்ளான காரை ஓட்டிச் சென்ற 64 வயது ஆடவர் சுயநினைவு இழந்த நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் அங்கு அவர் சிகிச்சை பலனின்றிப் பின்னர் உயிரிழந்ததாகவும் தெரிவித்தது.
அந்தக் கார் கட்டுப்பாட்டை இழந்து தானாகவே சாலையில் வழுக்கிச் சென்று விபத்துக்குள்ளாகி இருக்கக்கூடும் என நம்பப்படுவதாகவும் அது குறிப்பிட்டது.
விசாரணை தொடர்கிறது.

