தெம்பனிசில் திங்கட்கிழமை (ஏப்ரல் 27) காலை நிகழ்ந்த விபத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார், நடைபாதையில் ஏறி தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரி வளாகத்தின் வேலிமீது மோதியது.
தெம்பனிஸ் அவென்யூ 1, தெம்பனிஸ் அவென்யூ 8 சந்திப்புக்கு அருகில் நிகழ்ந்த இந்த விபத்து குறித்து காலை 8.30 மணியளவில் தகவல் கிடைத்ததாகச் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
சம்பவ இடத்திற்குச் சென்ற அதிகாரிகள், ஒருவரைப் பரிசோதித்தனர். அவருக்குச் லேசான காயங்கள் ஏற்பட்டிருந்தன. அவர் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்துவிட்டார்.
பலதுறைத் தொழிற்கல்லூரி வளாகத்திற்கு வெளியே அந்த கார் மற்றொரு காருடன் மோதியதாகவும் அது கட்டுப்பாட்டை இழந்து நடைபாதையில் ஏறி வேலிமீது மோதியதாகவும் சாவ்பாவ் செய்தி வெளியிட்டது.
விபத்திற்குப் பிந்தைய காட்சிகளைக் காட்டும் காணொளியில், தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரி மேற்கு நுழைவாயிலுக்கு வெளியே உள்ள நடைபாதையில் கறுப்பு நிற கார் ஒன்று வேலிமீது மோதி நிற்பது தெரிகிறது. அந்த கார் இருக்கும் பகுதியைச் சுற்றித் தடுப்புவேலிகள் போடப்பட்டிருந்தன.
காலை 10.40 மணியளவில் சாவ்பாவ் செய்தியாளர்கள் சம்பவ இடத்திற்குச் சென்றபோது, அந்த கார் நடைபாதைக்கு அருகிலிருந்த தீயணைப்புக் குழாய் மற்றும் ஒரு சிறிய மரத்தின்மீதும் மோதியிருந்தது தெரியவந்தது.

