சுவா சூ காங்கில் கடந்த வாரம் நிகழ்ந்த விபத்து தொடர்பான விசாரணையில் கார் ஓட்டுநர் உதவி வருகிறார்.
சுவா சூ காங் அவென்யூ 1, சுவா சூ காங் வே சந்திப்பில் கடந்த வெள்ளிக்கிழமை (டிசம்பர் 20) அந்த விபத்து நிகழ்ந்தது.
காரும் வேனும் மோதிக்கொண்ட அந்தச் சம்பவம் குறித்து அன்று பிற்பகல் 2.40 மணிக்குத் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக காவல்துறை கூறியது.
39 வயது கார் ஓட்டுநரும் 63 வயது வேன் ஓட்டுநரும் இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அப்போது அவ்விருவரும் சுயநினைவுடன் இருந்ததாகக் காவல்துறையும் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையும் கூறின.
விபத்து எப்படி நிகழ்ந்தது என்பது தொடர்பான விசாரணையில் கார் ஓட்டுநர் உதவி வருவதாகக் காவல்துறை தெரிவித்தது.
விபத்தைக் காட்டும் காணொளி ஒன்று டிசம்பர் 25ஆம் தேதி எஸ்ஜி ரோடு விஜிலெண்ட் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றப்பட்டது.
சாலைச் சந்திப்பில் வெண்ணிற வேனும் சிவப்பு நிற காரும் மோதியது அந்தக் காணொளியில் தெரிந்தது. மோதிய வேகத்தில் காரின் பின்புறம் சாலை நடுவில் இருந்த தடுப்பில் மோதி நின்றது.