ஈசூனில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 28) விபத்து நேர்ந்தவுடன் கார் ஒன்றில் தீப்பிடித்துக்கொண்டது. சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் வருவதற்குமுன் தீ அணைக்கப்பட்டு விட்டது. அதில் எவருக்கும் காயமில்லை.
காணொளியில் பதிவான காட்சியில், ஈசூன் அவென்யூ 1, சிலேத்தார் வெஸ்ட் லிங்க் சந்திப்புக்கு அருகில் கார் எரிந்துகொண்டிருந்தது தெரிந்தது.
கார் தீப்பற்றிக்கொண்டது பற்றி தனக்கு மாலை 5.35 மணிக்குத் தகவல் கிடைத்ததாக குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. காரின் இயந்திரத்தில் பிடித்த தீ, நீரைப் பீய்ச்சியடித்து அணைக்கப்பட்டது.
தீப்பிடிப்பதற்குமுன் அந்த கார் மற்றொரு காருடன் நேருக்குநேர் மோதியது என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது.
சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
கடந்த பிப்ரவரியில் வெளியிடப்பட்ட வருடாந்திர புள்ளிவிவர அறிக்கையில், 2022ல் வாகனம் தொடர்பான தீச்சம்பவங்கள் 31.6% அதிகரித்ததாகக் கூறியது. இது 2021ன் எண்ணிக்கையைவிட 155 சம்பவங்கள் அதிகம்.