மதுபோதையில் வாகனத்தை ஓட்டிய சந்தேகத்தின்பேரில் தோ பாயோவில் வெள்ளிக்கிழமை (ஜூலை 24) அதிகாலை 62 வயது ஆடவர் கைது செய்யப்பட்டார். அன்றைய தினம் அதிகாலை 3.10 மணியளவில் விபத்து குறித்து தகவல் கிடைத்ததாகக் காவல்துறை தெரிவித்தது.
கட்டுப்பாட்டை இழந்து அந்தக் கார் தோ பாயோ லோரோங் 6ஐ நோக்கிய லோரோங் 1ல் உள்ள சாலைத் தடுப்பை மோதி நின்றது என்று காவல்துறை விவரித்தது.
ஃபேஸ்புக்கில் பகிரப்பட்ட புகைப்படத்தில் சாலை நடுவே இருந்த தடுப்புக் கம்பியை மோதிய நிலையில் வெள்ளை நிறக்கார் நிற்பது தெரிகிறது.
சுயநினைவோடு இருந்த அந்தக் கார் ஓட்டுநர் மருத்துவமனைக்கு சம்பவம் நிகழ்ந்த இடத்திலிருந்து அழைத்துச் செல்லப்பட்டார். அவர் மதுபோதையில் வாகனம் ஓட்டிய குற்றத்துக்குக் காவல்துறையால் பிறகு கைது செய்யப்பட்டார்.
காவல்துறை விசாரணை தொடர்கிறது.

