சுவா சூ காங் அருகில் போக்குவரத்து விளக்குக் கம்பம் அருகில் உள்ள தடுப்பில் தாம் ஓட்டிவந்த காரை மோதிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்ற 33 வயது ஆடவர் பிறகு கைது செய்யப்பட்டார்.
கிராஞ்ஜி விரைவுச் சாலையில் இருந்து பிரிக்லாந்து ரோட்டை நோக்கிச் செல்லும் சாலையில் வெள்ளிக்கிழமை (ஜூன் 26) காலை 9 மணியளவில் நடந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சம்பவ இடத்தை வந்தடைந்த காவல்துறையினர் வாகனத்தில் வரி செலுத்தப்படாமல் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்டவை என்று சந்தேகிக்கப்படும் சிகரெட் பொட்டலங்களைக் கண்டெடுத்தனர்.
விபத்து நடந்ததும் அங்கிருந்து தப்பிச் சென்ற ஆடவர் பிறகு கைது செய்யப்பட்டார். வாகன உரிமம் இல்லாமல் அவர் காரை ஓட்டியுள்ளதாக விசாரணையில் தெரியவந்தது.
வரி சார்ந்த குற்றங்களுக்காக சிங்கப்பூர் சுங்கத்துறையிடம் ஆடவர் ஒப்படைக்கப்படுவார் என்று காவல்துறை கூறியது. விபத்தை நேரில் பார்த்த 60 வயது முதியவர், விபத்து நடந்ததும் ஓட்டுநர் அங்கிருந்து ஓடிவிட்டதாக சீன ஊடகத்திடம் குறிப்பிட்டார்.

