மத்திய விரைவுச் சாலையில் நள்ளிரவில் அதிவேகமாக கார் ஓட்டிச் சென்ற ஆறு பேர் கொண்ட குழுவில் இருந்த நான்காவது ஓட்டுநருக்கு திங்கட்கிழமை (ஜூலை 13) நான்கு மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
லீ ஜுன் என் கில்விஸ் என்ற அந்த 23 வயது இளையர், சிறையிலிருந்து விடுதலையான நாளிலிருந்து மூன்று ஆண்டுகளுக்கு வாகனங்களை ஓட்டவும் தடை விதிக்கப்பட்டது.
அபாயகரமாக வாகனம் ஓட்டியதாகக் கூறப்படும் ஒரு குற்றச்சாட்டை அவர் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
கடந்த 2024 அக்டோபர் 27ஆம் தேதி அவரும் அவருடன் மற்ற ஐவரும் அதிகாலையில் அடுத்தடுத்து இரண்டு மோதல்களுடன்கூடிய ஒரு பெரிய சாலை விபத்தில் சிக்கினர்.
இந்தக் குழுவைச் சேர்ந்த இதர இரு ஓட்டுநர்களான டேமியன் சியா ஹுவா சுவான், 29, ஷெர்மன் குவே கோக் ரோங், 22 ஆகியோருக்கு ஜூன் 29ல் முறையே நான்கு மாதங்கள் இரண்டு வாரச் சிறைத்தண்டனையும், இரண்டு மாதங்கள் மூன்று வாரச் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.
இவர்கள் இருவரும் விடுதலையான தேதியிலிருந்து மூன்று ஆண்டுகள் வாகனம் ஓட்டவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மார்கஸ் லாவ் யோங் வெய், 35 என்ற மற்றொரு நபருக்கும் அபாயகரமாக வாகனம் ஓட்டிய குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து ஜூன் 26ல் நான்கு மாதச் சிறைத்தண்டனையும் மூன்று ஆண்டுகள் வாகனம் ஓட்டவும் தடை விதிக்கப்பட்டது.
இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற இரு ஓட்டுநர்களான கோ ஜேரேட்-கேன், 26, கோங் ஜியா குவான், 24 ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் இன்னும் நீதிமன்ற விசாரணையில் உள்ளன.
இந்த வழக்கு பற்றி விளக்கிய அரசுத் தரப்பு வழக்கறிஞரான சியே ஜெர் யுவான், இந்த ஆறு பேர் கொண்ட குழுவினர் 2024 அக்டோபர் 27ஆம் தேதி அதிகாலை ஒரு மணியளவில் ஸ்டேடியம் பொலிவார்டில் உள்ள ஒரு வாகன நிறுத்துமிடத்தில் சந்தித்து பின்னர் நகரின் மையப்பகுதியை நோக்கி அதிவேகமாகப் பயணிக்கத் தொடங்கினர் என்றார்.

