பாசிர் ரிசில், பின்னால் வந்த கார் மோதியதில் கட்டுபாட்டை இழந்த மற்றொரு கார் சாலைத் தடுப்பை மோதி விபத்துக்குள்ளானது. திங்கட்கிழமை (ஜனவரி 8ஆம் தேதி) நடந்த இவ்விபத்து குறித்துக் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வலது வழித்தடத்தில் சென்றுகொண்டிருந்த சிவப்பு நிற கார் ஒன்று, தனக்கு முன்னர் சென்றுகொண்டிருந்த வேனை முந்திச் செல்ல முயன்றபோது, நடு வழித்தடத்தில் சென்றுகொண்டிருந்த வெள்ளை நிறக் காரின் பின்பகுதியில் மோதுவதை ‘எஸ்ஜி ரோட் விஜிலாண்டே’ தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்த காணொளியில் காண முடிந்தது.
இதனால், கட்டுபாட்டை இழந்த அந்த வெள்ளை நிற கார் சுழன்றுகொண்டே சாலை நடுவே இருந்த தடுப்பில் மோதி சாலை முழுவதும் சிதைவுகளைச் சிதறவிட்டதையும் அக்காணொளியில் காண முடிந்தது.
பாசிர் ரிஸ் டிரைவ் 3ல் திங்கட்கிழமை நடந்த இச்சம்பவம் குறித்துத் தங்களுக்கு அன்று மாலை 4.40 மணிக்குத் தகவல் கிடைத்தது எனக் காவல்துறையினர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தனர்.
மேலும், அவ்விரு கார்களின் ஓட்டுநர்களுக்கும் சிறிய காயங்கள் ஏற்பட்டன என்றும் அவர்கள் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்துவிட்டனர் என்றும் அவர்கள் கூறினர்.
இச்சம்பவம் குறித்துக் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.