புதிதாக முன்மொழியப்பட்ட மோசடி எதிர்ப்புச் சட்டங்கள், கெரோசல், டிக் டாக், டெலிகிராம் மற்றும் மெட்டாவின் தளங்களைப் பயன்படுத்துவோர் உட்பட, இணைய கணக்கு இடைத்தரகர்களைக் குறிவைக்கும்.
அத்தகைய கணக்குகளை உருவாக்குவதற்காக ஒருவரின் தனிப்பட்ட விவரங்களை வழங்குவதும் குற்றச் செயல்களுக்காக அத்தகைய கணக்குகளை வழங்குவதும் அல்லது வாங்குவதும் ஒரு குற்றமாகும்.
செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 4) நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மோசடிகள் (தடுப்பு நடவடிக்கைகள்) மற்றும் பிற விஷயங்கள் மசோதாவின் ஒரு பகுதியாக இந்த மாற்றங்கள் உள்ளன.
பணத் தரகர்கள் மற்றும் மோசடிகளுக்காக சிம் அட்டைகளையும் சிங்பாஸ் கணக்குகளையும் வழங்குபவர்களைக் குறிவைத்து ஏற்கெனவே சட்டங்கள் நடைமுறையில் உள்ளன.
ஆனால், ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம், வாட்ஸ்அப், டெலிகிராம், டிக்டாக், கெரோசல் போன்ற சமூக ஊடகங்களில் மோசடிகளுக்காக இணைய கணக்குகளை வழங்குபவர்களுக்கு எதிராகக் காவல்துறை நடவடிக்கை எடுக்க அனுமதிக்கும் குற்றங்கள் தற்போது இல்லை.
இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், குற்றச் செயல்களுக்காக இதுபோன்ற கணக்குகளை உருவாக்க தனிப்பட்ட தகவல்களை வழங்குவது, பெறுவது, வைத்திருப்பது மற்றும் அளிப்பது ஒரு குற்றமாக ஆக்கப்படும்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அத்தகைய இணைய கணக்குத் தரகர்களுக்கு $10,000 வரை அபராதம், மூன்று ஆண்டுகள் வரை சிறை, 12 பிரம்படிகள் தண்டனையாக வழங்கப்படலாம்.
இந்த மாற்றங்கள், நடைமுறை விதிகள், அமலாக்க வழிகாட்டுதல்களுக்கு இணங்காத இணையச் சேவை வழங்குநர்களையும் குறிவைத்து, அதிகபட்ச அபராதத்தை $1 மில்லியனிலிருந்து $10 மில்லியனாக உயர்த்துகின்றன.
தொடர்ந்து குற்றம் செய்தால், தினசரி அபராதம் $100,000லிருந்து $300,000 ஆக உயர்த்தப்படும்.
மோசடிகளை எதிர்த்துப் போராட ஏஐ-யைப் பயன்படுத்துதல்
குறுகிய காலத்திற்குள் மோசடிக்காரர்கள் அதிக எண்ணிக்கையிலான மோசடி இணையத்தளங்கள், கணக்குகள், விளம்பரங்களை உருவாக்கி வருவதால், அவற்றை மனித முயற்சியால் ஆய்வு செய்வது கடினமாகி வருகிறது என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
பல மோசடிக் கும்பல்கள் தங்கள் செயல்பாடுகளில் செயற்கை நுண்ணறிவைப் (ஏஐ) பயன்படுத்தி வருகின்றன.
இதைச் சமாளிக்க, ஒரு கணினி நிரலைப் பயன்படுத்தி மோசடிக்கு எதிரான வழிகாட்டுதல்களை வழங்க இந்த மசோதா வழிவகுக்கும்.
செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் கணினி நிரல்கள் உட்பட, இதுபோன்ற மோசடி முயற்சிகளை மிகவும் திறம்பட முறியடிக்க முடியும்.
இந்த முயற்சி துல்லியமாகவும் நேர்மையாகவும் இருப்பதை உறுதிசெய்ய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்று காவல்துறை மேலும் தெரிவித்தது.


