விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர் வழங்கிய விதிமுறைகளைச் சரியாகப் புரிந்துகொள்ளாத நிலையில் மலேசிய ஏர்லைன்ஸ் போயிங் 737-800 வகை விமானம் ஓடுபாதையில் அனுமதியின்றி நுழைந்துவிட்டது.
சாங்கி விமான நிலையத்தில் இந்தச் சம்பவம் கடந்த 2025ஆம் ஆண்டு மே 19ஆம் தேதி மாலை 4.52 மணியளவில் நிகழ்ந்தது. யாருக்கும் காயங்கள் ஏற்படாத நிலையில் அந்த விமானத்துக்கு ஓடுபாதையைப் பயன்படுத்தும் அனுமதி பிறகு வழங்கப்பட்டு, அது கோலாலம்பூரை நோக்கி புறப்பட்டுச் சென்றது.
இதுகுறித்து ஏப்ரல் 1ஆம் தேதி போக்குவரத்துப் பாதுகாப்புப் புலனாய்வுப் பிரிவு (டிஎஸ்ஐபி) வெளியிட்ட அறிக்கையில் சம்பவத்தின் விவரங்கள் தெரியவந்தன.
சம்பவம் நடந்த நாளன்று மலேசிய ஏர்லைன்ஸ் விமானிகள், முன்னதாக அனுமதி மறுக்கப்பட்டும், ஓடுபாதையில் விமானத்தை நிறுத்தியுள்ளனர்.
அப்போது, தொடர்புக்கான ஒலி அலையில் பல விதிமுறைகள் கட்டுப்பாட்டாளர்களால் இதர விமானங்களுக்கு வழங்கப்பட்டுவந்தன. அந்த பரபரப்பில், மலேசிய விமானிகள் புரிந்துகொள்ளும் வகையில் விதிமுறைகள் அமையவில்லை என்று விசாரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே ஓடுபாதையில் மற்றொரு விமானம் தரையிறங்கி அவ்விடத்தைவிட்டுச் சென்றதும், மலேசிய விமானம் அங்கிருந்து புறப்பட 4.54 மணிக்கு கட்டுப்பாட்டாளர்கள் அனுமதி வழங்கினர்.
மனிதர்கள், வாகனங்கள், விமானங்கள் போன்றவை பயன்பாட்டில் உள்ள ஓடுபாதையிலோ அதன் அருகிலோ அனுமதியின்றி இருந்தால், அது ‘ஓடுபாதை ஊடுருவல்’ என்று டிஎஸ்ஐபி அமைப்பால் வகைப்படுத்தப்படுகிறது. போக்குவரத்து அமைச்சின் அங்கமாக அந்த அமைப்பு செயல்படுகிறது.
ஓடுபாதையை நுழைவதற்கு முன்பாக ஏறத்தாழ 4.49 மணிக்கு, போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகளிடம் இருந்து மலேசிய ஏர்லைன்ஸ் விமானிகளுக்கு ஓடுபாதை 20Cஅருகே உள்ள சாலையில் காத்திருக்கும்படி அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

