நியூட்டன், குவீன் ஸ்திரீட் ஆகிய இடங்களில் இருந்து மலேசியாவுக்குச் செல்லும் பயணிகள் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 20) முதல் காஸ்வே லிங்க் பேருந்துகளில் ரொக்கமாகக் கட்டணம் செலுத்த முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் விசா, மாஸ்டர்கார்டு, மஞ்சாலிங்க் அல்லது ஈஸிலிங்க் அட்டைகள் மூலம் கட்டணம் செலுத்தலாம் என்று காஸ்வே லிங்க் நிறுவனம் ஆகஸ்ட் 17ஆம் தேதி வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளது.
மஞ்சாலிங்க் என்பது எல்லை தாண்டிய காஸ்வே லிங்க் பேருந்துகளிலும் மலேசியாவின் ஜோகூரில் உள்ள சில குறிப்பிட்ட பேருந்துப் பாதைகளிலும் ரொக்கமில்லாப் பணப்பரிவர்த்தனைக்குப் பயன்படும் திறன் அட்டையாகும்.
பயணிகள் லூகோ செயலி மூலமாகவோ ஒரு வழி மின்னிலக்கப் பயணச்சீட்டுகள் மூலமாகவோ கட்டணத்தைச் செலுத்தலாம்.
ரொக்கமாகக் கட்டணம் செலுத்த விரும்புவோர் பேருந்தில் ஏறுவதற்கு முன்பே தங்களின் பயணச்சீட்டை வாங்க வேண்டும். குவீன் ஸ்திரீட்டில் இருப்பவர்கள் மஞ்சாலிங்க் தானியக்கச் சேவை இயந்திரத்திலும், நியூட்டனில் ஏறுபவர்கள் காஸ்வே லிங்க் ஊழியர்களிடமிருந்தும் பயணச்சீட்டைப் பெற்றுக்கொள்ளலாம்.
காஸ்வே லிங்க் பேருந்துகள் தவிர, குவீன் ஸ்திரீட்டில் இருந்து மலேசியா செல்லும் பயணிகள் எஸ்பிஎஸ் 170 பேருந்துச் சேவையையும் பயன்படுத்தலாம். மேலும், இந்த இரண்டு நிலையங்களிலிருந்தும் மலேசியாவுக்குச் செல்லும் நீண்டதூரப் பேருந்துகளையும் பயணிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.


