சமூகத்தினர் பராமரித்து வந்த பூனை ஒன்று, கொடூரமாகக் கொல்லப்பட்ட விவகாரத்தில் எந்த மாதிரியான நபர் இதனைச் செய்திருப்பார் என்று உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம் தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
மே 9ஆம் தேதி ஈசூனில் வயிற்றுப் பகுதி அகற்றப்பட்டு, கண்கள் பிடுங்கப்பட்டு பூனை இறந்து கிடந்தது.
இது குறித்து ஃபேஸ்புக் பதிவில் தனது கோபத்தை வெளிப்படுத்தியிருந்த திரு சண்முகம், “எந்த மாதிரியான நபர் இதனைச் செய்திருப்பார், இது, மக்கள் செய்யக்கூடிய காரியமல்ல,” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
கொல்லப்பட்ட பூனையின் புகைப்படங்கள், ‘சாயாங் அவர் சிங்கப்பூர் கம்யூனிட்டி கேட்ஸ்’ ஃபேஸ்புக் பக்கத்தில் மே 9ஆம் தேதி பதிவேற்றப்பட்டிருந்தது. கொலையாளி தேடப்படுவதாகவும் அதனுடன் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
“அனைவராலும் விரும்பப்படும் பூனையின் பெயர் கிங் காங். நான் தினமும் அந்தப் பூனைக்கு உணவளிப்பேன். என்னால் இந்தச் செய்தியை நம்ப முடியவில்லை,” என்று திருவாட்டி மின் காவுங் பதிவிட்டிருந்தார். சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தகவல் தெரிவிக்கவும் அவர் அழைப்பு விடுத்திருந்தார்.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் பேசிய திருவாட்டி மின் காவுங், 25, குடியிருப்புப் பேட்டையின் நுழைவு வாயிலில் உள்ள சாலையில் பூனையின் சடலத்தை காலை 6.15 மணியளவில் குடியிருப்பாளர் ஒருவர் கண்டுபிடித்ததாகக் கூறினார்.
உடல் பாகங்கள் தூண்டாக்கப்பட்ட பூனையின் படத்தை குடியிருப்பாளர், வாட்ஸ்அப்பில் பகிர்ந்துகொண்டதும் பலரும் வந்து கீழே வந்து பார்த்தனர். சந்தேக நபர், பூனையைக் கொன்ற பிறகு சாலையில் போட்டிருக்கலாம் என்று அவர் சந்தேகிக்கிறார்.